முற்கூறிய எழுதிணையுள், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற
ஒழுக்கத்தினை, ஒலிக்கும் திரை சூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்
கொடுத்த இலக்கணத்தை, நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே
நிற்கும்படியாகச் செய்தார் என்றவாறு.
குறிஞ்சியும் முல்லையும் பல ஆண்டுகள் மழையின்றி ஒழியின்
வன்பாலையாகும்; அவையே மீண்டும் மழைவளம் பெறின் முறையே
குறிஞ்சியும் முல்லையும் ஆகும்; மருதமும் நெய்தலும் பல ஆண்டுகள்
மழைவளம் பெறாது ஒழியின் மென்பாலையாகும்; அவையே மீண்டும்
மழைவளம் பெறின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும் ஆதலின்,
தொல்காப்பியனார் பாலைக்கு எனத் தனியே நிலம் கூறவில்லை.
மதுரைக்காஞ்சியில் ஏனைய நான்கு நிலங்களோடு பாலையும்
வருணிக்கப்பட்டுள்ளது. பாலைக்கலியும், பாலைக்குறுநூறும், அகநானூற்றுள்
ஒற்றைப்படை எண்ணுடைய பாடல்களும்; நற்றிணை குறுந்தொகைப்
பாடல்கள் சிலவும் பாலை நில வருணனை தருதலின்" பின்னுள்ளோர்
பாலையைத் தனிநிலமாகக் கூறுதல் முன்னோர் நூலொடு முரணாது
என்பதாம்.