மருதத்திற்குத் தெய்வம் இந்திரன், "தீம்புனல் உலகம்" (தொல்.பொ.5)
எனவும் "வைகறைவிடியல்" (தொ.பொ.9) எனவும் ஓதினமையால்,
அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு-நெல்.
மா-எருமையும் நீர் நாயும். மரம்-மருதும் காஞ்சியும். புள்-அன்னமும்
அன்றிலும். பறை-நெல்லரி பறை. செய்தி-உழவு. பண்-மருதம். "பிறவும்"
என்றதனால், பூ-தாமரையும் கழுநீரும்; நீர்-ஆற்று நீரும் பொய்கைநீரும்.
பிறவும் அன்ன.
முல்லைக்குத் தெய்வம் கண்ணன். "காடுறை உலகம்" (தொல்.பொ.5)
என்றதனானும் "காரும் மாலையும் முல்லை" (தொல்.பொ.6) என்றதனானும்,
காட்டினும் கார்காலத்தினும் மாலைப்பொழுதினும் நிகழ்பவை கொள்க.
உணவு-வரகும் முதிரையும். மா-மானும் முயலும். மரம்-கொன்றையும்
குருந்தும் புதலும். புள்-கானாங்கோழி. பறை-ஏறுகோட்பறை. செய்தி-
நிரைமேய்த்தல். யாழின்பகுதி என்பது பண்; அது சாதாரி. "பிறவும்"
என்றதனால். பூ முல்லையும் பிடவும் தளவும்; நீர்-கான்யாறு. பிறவும்
இந்நிகரன கொள்க.
உரையாசிரியர் தொல்காப்பியப் பொருட்படல 23, 24ஆம்
நூற்பாக்களில் நிலமக்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்:
குறிஞ்சிக்கு மக்கட்பெயர் குறவன், குறத்தி என்பன; தலைமக்கள் பெயர்
மலைநாடன், வெற்பன் என்பன.
பாலைக்கு மக்கள் பெயர் எயினர், எயிற்றியர் என்பன; தலைமக்கள்
பெயர் மீளி, விடலை என்பன.
முல்லைக்கு மக்கள் பெயர் பொதுவன், ஆயன் என்பன; தலைமக்கள்
பெயர் குறும்பொறைநாடன் என்பது போல்வன.
மருதத்திற்கு மக்கள்பெயர் உழவர்உழத்தியர் என்பன; தலைமக்கள்
பெயர் ஊரன், மகிழ்நன் என்பன.