216                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
     ஏணியும் சீப்பும் மாற்றி
     மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.         (புறநா. 305)


 என்பதனானும்,

     மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
     கடந்தானை நூற்றுவர்பால் நால்திசையும் போற்றத்
     தொடர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
     நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே
     நாராய ணாஎன்னா நாஎன்ன நாவே.        (சிலப். ஆய். குரவை)


 என்பதனானும் முறையே அவ்விருவருக்கும் தூதுநிமித்தம் பிரியும்
 பிரிவு தொழில் உரித்தாயவாறு காண்க.                             71

விளக்கம்

     "வயலைக்கொடியின்"-

     வயலைக்கொடி போன்ற வாடிய இடுப்பினையும் வருந்துதலை
 உடைய ஊர்ந்து செல்லுகின்ற நடையினையும் உடைய இளைய அந்தணன்
 இரவுக்காலத்தில் வந்து வாயில்காவலனால் சொல்லிவிடாமல் நேரே
 அரசனிடம் போய்க் கூறிய தூதுச்சொற்கள் சிலவற்றால் ஏணியும் கதவுகளில்
 இடும்தாழும் நீக்கப்பட்டு யானைகள் மணி களையப்பட்டுப் போர் ஆயத்தம்
 நிறுத்தப்பட்டது என்றவாறு.

     "மடந்தாழும்"-

     அறியாமை தங்கிய உள்ளத்தைஉடைய கம்சன் வஞ்சனையை
 அழித்தவன், பாண்டவர்க்காகத் தன்பின்னர் வேதங்கள் முழங்கவும் உலகம்
 துதிக்கவும் கவுரவர்பக்கல் தூது போனவன் ஆகிய திருமாலை ஏத்தி
 "நாராயணா" என்று அவன் திருநாமம் கூறாத நா பயனுடைய நா அன்று
 என்றவாறு.