பிரிவு அச்சமும், அதன்பின்னர் இன்றியமையாமை எடுத்து உரைத்தலும், பிரியேன் என்றலின் பின்னர்த் தீராத் தேற்றமும் வரவும்பெறும். தீராத்தேற்றம்-தீராதவாறு தேற்றுதல்.
"கறிஉறு சாரல் களிஉறு தோகைக் கணம்நடம்செய்
வெறியுறு சோலை விழைவுஉற நீடில் வெருவுறுமான்
மறிஉறு செங்கண் மதுமலர்க் கோதை நொதுமலர்வந்து
அறிவுறல் கூடும்என் றோதிரு மேனி அழுங்குவதே".
[பருவரல் உணர்தல்-தலைவி மனத்துக்கொண்ட வருத்தத்தைத் தலைவன் உணர்ந்து கூறுதல்.
மிளகுக்கொடி வளரும் பக்கமலைகளில் மயில்கள் ஆடும் மணம்மிக்க சோலையில் யான் காலம் தாழ்த்தித் தங்கின், அயலார் அறிதல் கூடும் என்றோ, மான் விழி நங்கையே! நீ உடல் வாடி வருந்துகிறாய்?]
"நீங்கின் சிறிது பொழுதுநில் லாஉயிர் நேரிழைக்குஇன்று
ஈங்குஇப் படிவைகில் எய்தும் பழிநமக்கு என்றுசிந்தித்து
ஓங்கல் சிலம்பிடை நின்றுஊச லாடி உயங்கும்நம்மைத்
தாங்கத் தகும்துணை யாதுகொல் லோஎன் தனிநெஞ்சமே".
[பிரிவுஅச்சம்-தலைவியிடத்து அன்பு காரணமாகப் பிரிதற்குத் தலைவன் அஞ்சுதல்.
மனமே! "யாம் பிரியின் தலைவி உயிர் நீப்பாள்; இங்கேயே இருப்பின் பழிவந்து சேரும்" என்று எண்ணியவாறே இம்மலையில் ஊசலாடி வாடும் நம்மைத் தாங்கி ஒருவழிப்படுத்தும் துணை யாதோ?]
|
|
|
|