அகத்திணையியல்-நூற்பா-135                             347


 

     [கூந்தலின் புதுமணம், புது அழகு, பிறைதொழ மறுத்தல், குறைந்த
 உணவு, தனித்துச் செல்லுதல், செய்வன மறைத்தல், ஒருபால் சென்று நிற்றல்
 இவை சாதாரணச் செயல்கள் என்று  விடுக்கத் தக்கன அல்ல; தலைவிக்கு
 ஏதோ ஒரு புதுத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.]

     இனி, அவை தனித்தனி வருமாறு காட்டுதும்.

     நாற்றத்தான் ஐயம்உற்று ஓர்தல்:

 "கங்கைச் சடிலர் மதுரா புரீசர் கடம்பவனத்து
  எங்கட்கு உளதன்றி எங்குஉள தோஇவட்கு ஆரமும் பூந்
  தொங்கல் புதுமண மும்திருப் பாவைபொற் றோளும் இரு
  கொங்கைக் குவடும் அளகா டவியும் குடிகொண்டதே".

மதுரை. 95

 எனவும்,

     [மதுராபுரேசர் கடம்பவனத்தைச் சார்ந்த இவட்கு எங்களிடம் இல்லாத
 அளவில்  புதுமையாகச் சந்தன மணமும் பூ மணமும் எவ்வாறு
 உண்டாயின? இவள் தோள்களிலும் கொங்கையிலும் ஆர மணமும்
 தொங்கலில் புதுமலர் மணமும் ஏற்பட்டதன் காரணம் யாது?]

     தோற்றத்தான் ஐயம்உற்று ஓர்தல்:

    "தோளில் குழைவும் களபா சலம்தரு சோபையும்வை
     வாளில் சிறந்த விழியும்கண் டால்சசி வட்டம்என்னும்
     கோளில் திகழ்குடை யார்கூடல் வாழும் கொடியிடைக்கு
     நாளில் புதுமை சிறந்துஒரு கோடி நலம்தருமே".

மதுரை. 96

 எனவும்,

     [சந்திரனை ஒத்த குடையை உடையாரின் கூடலில் வாழும்
 இக்குறப்பெண், தோளில் குழைவும் தனங்களில் புது ஒளியும் விழியில்
 தனிக்கூர்மையும் புதுமையாகப்பெற்றுப் புதுவனப்புக்  கொண்டுள்ளாள்.]