ஒழுக்கத்தான் ஐயம் உற்று ஓர்தல்:
"கந்துஆ டியகளிற் றார்கடம் பாடவிக் காவின்மின்போல்
வந்தாள் ஒழுக்கவழக்கு என்சொல்வேன் வண்டல் ஆடலும் பூஞ்
சந்துஆடு சோலை மணிஊசல் ஆடலும் தண்தரளப்
பந்துஆடலும்மறந் தாள்என்ன பாவம் பலித்ததுவே".
[சிவபெருமானின் கடம்பாடவிச் சோலையில் மின்போல் வந்த தலைவியின் ஒழுக்கம்பற்றி யாது சொல்லவல்லேன்? வண்டல் ஆடுதலும், சோலையில் ஊசல் ஆடுதலும், பந்து ஆடுதலும் மறந்துவிட்டாள். என்ன தீவினை ஏற்பட்டு விட்டதோ?]
உண்டியான் ஐயம் உற்று ஓர்தல்:
"பெருந்தா மரைப்பதம் போற்றிநிற் பார்பிற விப்பிணிக்கு
மருந்தா கியபெரு மான்மது ரேசர் வரையில் இந்தக்
கருந்தாரை வேல்கண்ணிக்கு என்னகண் மாயம் கலந்ததுஅண்டர்
அருந்தா அமுதுஅருந் தப்புகுந் தாலும் அருந்திலளே".
[அடியார்க்குப் பிறவிப்பிணியைப் போக்கும் மதுரேசர் மலையில் இத்தலைவிக்கு என்னமாயம் ஏற்பட்டுவிட்டதோ? அறியேன்; தேவாமிருதம் போலும் சுவைஉடைய பொருள்களையும் உண்ண மறுக்கிறாள்.]
செய்வினை மறைப்பான் ஐயம்உற்று ஓர்தல்:
"யாமேயும் அன்றி இனஆய வெள்ளமும் இன்றிஇவர்
தாமே புரியும் தவம்என்கொ லோதண் தரளம்அணி
வாம்மே கலைப்பங்கர் வாழ்மது ராபுரி வைகைசுற்றும்
பூமேவு சோலையும் செய்குன்று மாகப் புகுந்துநின்றே".
|
|
|
|