அகத்திணையியல்-நூற்பா-135                              359


 

     உரைத்தது உரையாது கருத்து அறிவித்தல்:

 "வில்நிற வாள்நுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
  தன்நிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தனது அம்பலம்போல்
  மின்நிற நுண்இடைப்பேரெழில் வெண்நகைப்பைந்தொடியீர்
  பொன்நிற அல்குலுக்கு ஆமோ மணிநிறப் பூந்தழையே".

திருக்கோவை. 58

 எனவும் வரும். பிறவும் அன்ன.

     ["வாள்நுதல் வேற்கண் பார்வதியைத் தன் மேனியில் இருத்தி நின்ற
 சிவபெருமானது அம்பலம்போல, ஒளிவீசும் நுண்இடைப் பேர்எழில்
 வெண்முறுவல் மகளிரே! யான் கொண்டுவந்துள்ள இத்தழையாடை நுமக்கு
 அணிதற்கு ஏற்குமோ?" என்று கூறுங்கள்.]

     யாரே இவர் மனத்து எண்ணம் யாது எனத்தேர்தல்:

 "பல்லிலன் ஆகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
  எல்லிலன் நாகத்தொடுஏனம் வினாவுஇவன்யாவன் கொலாம்
  வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
  சொல்லில னாகற் றவாகட வான்இச் சுனைப்புனமே".

திருக்கோவை. 60

 எனவும்,

     [பகலைப் பல் உகுத்த சிவபெருமானுடைய தில்லையைப்
 பாடாதவரைப்போல ஒளி இழந்து, யானையும் பன்றியும் வந்த வழியை
 வினாவும் இவன், இப்புனத்தைக் கடவானாய்க் கையில் வில் இன்றித் தழை
 ஏந்தி வேட்டைக்கு வந்தவனாக உண்மை ஏதும் உரையானாய்
 உளான். இவன் யாவனோ?]

 "ஆழம்மன் னோஉடைத்து இவ்வையர் வார்த்தை அநங்கன்நைந்து
  வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே
  வேழம்முன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
  மாழைமென் நோக்கி இடையாய்க் கழிந்தது வந்துவந்தே".

திருக்கோவை. 61

 எனவும்,