அகத்திணையியல்-நூற்பா-135                              363


 

     இறைவனை நகுதலும், மதியினின் அவர்அவர் மனக்கருத்து உணர்வும்
 என்னும் மூன்றும் இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தற்கும் உரியவாம்.

     புனம் கண்டு மகிழ்தல்:

    "உவரும் புலவும் ஒழிக்கும் கழிப்புன்னை ஒண்மலர்த்தாது
     இவரும் துறை, அன்னம் மென்நடை யார் இதண் ஏற முல்லைப்
     பவரும் கொடியும் படர்கொழுஞ் சாரல், பசுந்தினையைக்
     கவரும் கிளியினுக்கு, இன்றுகைம் மாறுஒன்று கண்டிலமே"

அம்பி 83

 எனவும்,

     [உவர்மணம் புலால் நாற்றம் இவற்றைப்போக்கும் புன்னைத் தாது
 பரவும் கடல்துறையிலுள்ள அன்னம்போன்ற நடையையுடைய தலைவியும்
 தோழியும் பரணில் ஏறுமாறு, முல்லைக்கொடி படரும் சாரலிலே
 தினைக்கதிரைக் கவரும் கிளிகளுக்குச் செய்யத் தக்க கைம்மாறு ஒன்றும்
 இல்லை.]

     புனத்திடைக் கண்டு மகிழ்தல்:

 "தினைக்காவல் இந்தத் திருவைவைப் பார்அந்தச் செங்கமல
  மனைக்குஆர் உளர்என்று அறிந்தில ரோஅருள் மாரிவெள்ளச்
  சுனைக்காவி அம்கண்ணிதோய்வார் அழகிய சொக்கர்வெற்பில்
  வினைக்கா னவர்அறிவு இப்படி யோமுன் விதித்ததுவே".

மதுரை. 78

 எனவும் வரும்.                                               135

     [அருள்வெள்ளம் பொழியும் குவளைக்கண்ணியாகிய பார்வதியைக்
 கூடிய சொக்கநாதர் மலையிலே, இத்திருமகளைத் தினைக்காவலுக்கு
 இக்குறவர் வைத்துள்ளனரே! இவள் முன்பு தங்கியிருந்த செந்தாமரையில்
 வேறு யாரைத் தங்கச் செய்வர்? இவருக்கு ஆண்டவன் அறிவை இப்படி
 அமைத்து விட்டானே!]                                         135