382                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [தலைவனே! "தகரம் மகிழ் முதலிய நறுமண மரங்களை வெற்றுப் புதர்
 போலக் கொண்டு வெட்டிஎறிந்து அவ்விடத்தை உழுது தினை விதைப்பார்
 மரபில் வந்துள்ள தலைவி பிறர் துன்பம் கண்டு மனம் நோகும் இயல்பினள்
 ஆவளோ?" என்பதனை ஆராய்ந்து பார்]

     காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்:

    "அணங்குஉடைப் பனித்துறைத் தொண்டி அன்ன
     மணம்கமழ் பொழில்குறி நல்கினள் நுடங்குஇடைப்
     பொங்குஅரி பரந்த உண்கண்
     அம்கலுழ் மேனி அசைஇயல் எமக்கே"

ஐங்குறு நூறு. 174 

 எனவரும்.

     [அசையும் இடை, அரிபரந்த உண்கண், அழகுஒழுகும் மேனி, தளர்ந்த
 இயல் இவற்றை உடைய தலைவி, தெய்வம் தங்கும் குளிர்ந்த துறையை
 உடைய தொண்டி என்ற ஊரைப் போல நறுமணங்கமழும் பொழிற்கண்
 எனக்குக் குறிவாய்ப்ப அருளினாள்.]

     பாங்கி முன்னுறு புணர்ச்சி முறை உறக் கூறல்:

    "நறுந்தண் கூந்தல் குறுந்தொடி மடந்தை
     சிறுமுதுக் குறைவி ஆயினள் பெரிதுஎன
     நின்எதிர் கிளத்தலும் அஞ்சுவல் எனக்குஎன
     இன்உயிர் அன்னள் ஆயினும்
     தன்உறு விழுமம் காத்த லானே".

தொல். பொ. மே. 

 எனவரும்.

     [தண்கூந்தலாளாகிய குறுந்தொடி மடந்தை எனக்கு உயிர் போலச்
 சிறந்தனளாயினும் தனக்குவந்த துயரத்தைத்தானே காத்துக் கோடலான்,
 இளமையிலேயே பேரறிவு படைத்துவிட்டாள் என்பதை உன்னிடம் கூறுதற்கு
 அஞ்சுகிறேன்.