என்னை மறைத்து ஒழுகியவள், யான் மறை உணர்ந்ததை அறியின் என்னை வெகுளலும் கூடும். ஆதலின் மறையை யான் அறியாதது போல்வேனாக; நீ முன்புபோல நேரிடையாக அவள் தொடர்பைத் தொடர்ந்து கொள்க.]
"தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
என்கண்டு நயந்துநீ நல்காக் காலே".
[செங்கோலனாகிய குட்டுவனுடைய தொண்டியைப் போன்ற இயற்கை அழகுடைய நீ, என் நிலையைக்கண்டு உதவாய்ஆயின், யான் இனித் தலைவியின் தோள்களையும் கூந்தலையும் பலவாகப் பாராட்டி அவள் தொடர்புகொண்டு வாழ்தல் நிகழக்கூடிய செயல் ஆகுமோ?]
"கோடுஈர் எல்வளைக் கொழுமடல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாஅப் படூஉம்
தண்கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ".
எனவரும்.
[சங்குவளையலையும் பூ முடித்த கூந்தலையும் அழகிய தொடியினையும் உடைய தலைவியைக் கோடல்வேண்டின், கழிகளில் இறாமீன் பிடிக்கப்படும் நெய்தல் நிலத்தலைவனே! அவளை மணந்துகொண்டு தொடர்பு கொள்வாயாக.]
|
|
|
|