தலைமகன் மறுத்தல்:
"சிலைமேல் முகில்அன்ன நன்னுதல் மீது செறிகுழலாள்
முலைமேல் முயங்குவன் நீசொன்ன வாறு முழுமணியின்
கலைமே லணிதழை அல்குல்நல் லாய்முன் கவிகொணர்ந்த
மலைமேல் மருந்துவந் தோதலை மேல்விடம் மாற்றுவதே".
அம்பி. 111
[மேகலைமீது தழைஉடை அணிந்துள்ள தோழியே! வில்மேல் தங்கும் முகில்போல நெற்றிமேல் அமைந்த கூந்தலைஉடைய தலைவியை நீ கூறியவாறு வரைந்துகொண்டு தொடர்பு கொள்வது, தலைக்கு ஏறியவிடத்தை விரைந்து போக்குவதற்குச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர முயல்வதனை ஒக்கும்.]
பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்:
"முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
தனிதரும் இந்நிலத்து அன்றுஐயகுன்றமும்தாழ்சடைமேல்
பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
குனிதருதிண் சிலைக்கோடுசென்றான் சுடர்க்கொற்றவனே."
[வேலவனே! சந்திரனைச் சூடிய சிவபெருமான் திரிபுரத்தை அழிக்கக்கொண்ட மேருபோன்ற மேலைமலைச் சிகரத்தைக் கதிரவன் அடைந்துவிட்டான் இனிக்காலம் தாழ்த்தின் எம்தாயர் வெகுள்வர்; எம் ஐயர் மிகக்கொடியர். இனி, தனித்துக் காலம் தாழ்த்திப் போதல் கூடாது. எங்கள் மலையும் இந்நிலத்தில் இல்லை. சற்றுச் சேய்மையில் உள்ளது.]
|
|
|
|