[என் பிறவிப்பிணியைப் போக்கும் அம்பலவன் கயிலையை அடுத்த மலைப்பக்கத்துள்ள உம் சீறூரின்கண், உயிர்போய்க் கொண்டிருக்கும் என்படத்தையும் உன் தலைவிபடத்தையும் ஒரே துணியில் சேர்த்து எழுதிக் கைக்கொண்டு மடலூர்ந்து வருவேன்.]
தலைமகள் அவயத்து அருமை பாங்கி சாற்றல்:
"அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்து, ஆண்டுகொண்டு, என்
முடிச்சந்த மாமலர் ஆக்கும்முன் னோன்புலி யூர்புரையும்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப்
படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசுஅகத்தே".
[திருமால் காணமுடியாத திருவடிகளை என் தலைக்குப் பூக்களாகஆக்கி என்னை ஆட்கொள்ளும் சிவபெருமானுடைய புலியூரை ஒத்த இன்மொழித் தலைவியின் அன்னநடையை நீர் துணியில் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லையே!]
தலைமகன் தன்னைத்தானே புகழ்தல்:
"காரார் கொடைத்தடக் கைக்கரு மாணிக்கன் கப்பல்வெற்பின்
நேராக நீர்கொண்ட நெஞ்சுதந் தால்அந்த நெஞ்சுகொண்டே
ஏர்ஆர் திருஉரு எல்லாம் எழுத வரும்எனக்கு
வாரா திருப்பதுஐ யோமட வீர்உங்கள் வன்கண்மையே"
[கார்மேகம்போன்ற கொடைக் கையையுடைய கருமாணிக்கனுடைய கப்பல்நகரைச் சார்ந்த மலையில் நீங்கள் என்னிடம்இருந்து கைப்பற்றிக்கொண்ட என்மனத்தை மீளவும் திருப்பித் தந்தால், அதனைக்கொண்டு யான் தலைவியின் உருவ நலன்களை எல்லாம் கிழியில் எழுதவல்லேன். உங்கள் கல்மனம் ஒன்றே எழுதுதற்கு அரிது.] |
|
|
|