அகத்திணையியல்-நூற்பா-137                              399


 

     [திரிபுரத்தை அழித்து என்னை ஆட்கொண்ட செக்கர் மேனிப்
 பெருமானுடைய கயிலைமலையின்மேன் அன்றி வேறு இடங்களில், அருளே
 காரணமாகத் தலைவன் கொணர்ந்து நமக்கு எளிதாக தந்துள்ள இத்தழை
 காண்பது அரிது.]

     தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்:

 "மைத்தழை யாநின்ற மாமிடற்று அம்பல வன்கழற்கே
  மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்துக்
  கைத்தழை ஏந்திக் கடமா வினாய்க்கையில் வில்இன்றியே
  பித்துஅழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே"

                                                திருக்கோவை 102

 எனவும்,

     [நீலகண்டனான சிவபெருமான் திருவடிக்கே பித்துக் கொண்ட
 அன்பர்போல, மெய்நடுங்கிக்கொண்டு கையில்தழை ஏந்தித் தன் அம்பு
 பட்ட யானையை வினவிக் கையில் வில் இன்றிப் பெரியோன்  ஒருவன்
 பித்தன் போலப் பேசுகிறான்; என்ன பாவமிது!]

     மறுத்தற்கு அருமை மாட்டல்:

 "நீகண் டனைஎனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
  சேய்கண் டனையன் சென்று ஆங்குஓர் அலவன்தன் சீர்ப்பெடையின்
  வாய்வண்டு அனையதுஒரு நாவல் கனிநனி நல்கக்கண்டு
  பேய்கண் டனையதுஒன் றாகிநின் றான்அப் பெருந்தகையே."

                                                 திருக்கோவை 84

 எனவும்,

     [நேரிழையே! சிவபெருமான் மகனாகிய முருகனைப் போன்ற தலைவன்,
 நண்டு ஒன்று தன் பெடைநண்டின் வாயில் வண்டுபோல்வது ஒரு
 நாவற்கனியை உண்ணக் கொடுத்தனைக் கண்டு, பேயைக் கண்டவனைப்
 போலப் பித்துக் கொண்டு நின்றான். அதனை நீ கண்டிருந்தால் உயிர்வாழ
 மாட்டாய்.]