420                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [தலைவியே! தலைவனுடைய தேர்மணிகளின் ஓசை கேட்கிறது.
 இவ்வொளி மிக்க மலையை  நோக்கி வருகின்றார் போலும். வந்து நம்மைக்
 காணாமல், மனம் சுழலும் துன்பத்தையும் அவர்  அன்பையும்காண,
 நாகமரநிழலிலே இப்படிச் சிறிது மறைந்திருப்போம்.)

     தோழி சிறைப்புறமாகத் தலைமகற்குச் செறிப்பு அறிவுறுத்தல்:

 "இயலும் கலவ மயிலும்மென் மானும் இனக்கிளியும்
  முயலும் தவங்கள் முடிவது போலும் முதுமறலி
  செயலும் கமலமும் செங்கழு நீரும் செழியர்வெற்றிக்
  கயலும் பொருகண்நல் லாய்இன்று நாளைக் கடிபுனத்தே".

அம்பி. 175 

 எனவும்,

     [இயமனுடைய செயலும் கமலமும் கழுநீரும் பாண்டியர் தம்கயலும் ஒத்த
 கண்களை  உடையாய்! இன்று நாளை இக்காவலை உடைய புனத்தே,
 மயிலும் மானும் கிளியும் முயன்று  செய்யும் தவங்கள்
 முடிந்துவிடுவனபோலும்!]

     தோழி முன்னிலைப் புறமொழி மொழிந்து இல்செறிப்பு உணர்த்தல்:

 "பயில்காள பந்திப் புயல்அன்ன ஓதியைப் பைங்கிள்ளைகாள்
  மயில்காள் சிறிதும்மறக்கப் பெறீர்தஞ்சை வாணன் வெற்பில்
  குயில்காள் எங்கும் இயம்புதண் சோலையில் கூடிஇன்ப
  மயில்காள் வெங்கதிர் வேல்அன்பர் சால அயர்ப்பினுமே".

தஞ்சை. 152 

 எனவும்,

     [கிளிகாள்! மயில்காள்! தஞ்சைவாணன் வெற்பில் குயில்காள்!
 சோலையில் கூடின மயில்காள்!  கார்மேகம் போன்ற கூந்தலை உடைய
 தலைவியைத் தலைவன் மறப்பினும், நீங்கள் சிறிதும்  மறவாதீர்கள் ஆகுக.]