[நெஞ்சே! இவ்வுலகில் நம்போல் துன்பப்படப் பிறந்தவர் ஒருவரும் இல்லை. கச்சினைக் கடந்து பரந்த மென்முலைத் தலைவிக்குத் தாமரையே மாளிகை ஆதலின், அஃது இரவில் திறந்து அவளை வெளிவிடாது என்பதை அறிந்தும், வீணாக என்னைத் துன்புறுத்தி யானைகள் திரியும் இவ்விரவில் ஏன் இங்கு என்னைக் கொண்டுவந்தாய்?]
வறுங்களம் தலைவிகண்டு இரங்கல்:
நாம்வந்த வேற்கை நரபாலன் நாவலர் போய்வழுத்தும்
தோம்வந்து அடர்வழித் தொண்டையர் கோன்கப்பல் சூழ்துறையில்
தேம்வந்து அலர்புன்னை காள்கைதை காள்நெய்தல் சேர்ப்பர்கங்குல்
தாம்வந் தனர்கொல் யான்வந்து போனபின் சாற்றுமினே.
["அஞ்சத்தக்க வேலைக் கையில் ஏந்தியவனும் புலவர்கள் மிகவும் புகழும் குற்றம் நீங்கப்பெற்ற உண்மையான புகழுடைய மரபில் வந்தவனுமாகிய தொண்டைமானுடைய கப்பல் என்ற ஊரைச் சூழ்ந்த நீர்த்துறைக் கரையில் மலரும் புன்னைகளே! தாழைகளே! இரவில் யான்வந்து போயினபின் தலைவர் வந்தாரா?" என்ற செய்தியைச் சொல்லுங்கள்]
தலைவி பாங்கியொடு உரைத்தல்:
வரல்இங்கு அரிய வயங்குஇருள் யாமத்து வந்தனர்வேய்
நரலும் சிலம்பர் நவமணி ஆழிநறவு உண்வண்டு
முரலும்தளை அவிழ்மொய்ம்மலர்க்காந்தள் அம்செம்மலர்க்கை
விரல்என்று கொல்செறித்தார் நெறித்தாழ்குழல்மெல்லியலே.
[சுருண்ட கூந்தலை உடைய தோழியே! யாரும் வருதற்கு அரிய இருள்செறிந்த இரவில், மூங்கில் ஒலிக்கும் நம்
|
|
|
|