வெற்பர் இங்குவந்து, வண்டுகள் ஒலிக்கும் காந்தள்மொட்டினைச் செங்கைவிரல் என்றுகருதி, மணிகள் இழைக்கப்பட்ட மோதிரத்தை அதன்கண் செறித்துள்ளாரோ?]
நெய்தல் படுவில் நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலில் கண்டநாள் போலானால்
செய்த குறியும்பொய் ஆயினவால் சேயிழை
மையல்கொல் ஆன்றார் தொடர்பு.
[சேயிழை! நெய்தல் பள்ளத்தில் மலரும் உப்பங்கழிகள் நிறைந்த நெய்தல்நிலத்தலைவர், தாழைகள் சூழ்ந்த கடற்கரைச்சோலையில் முதலில் கண்ட நாள் போல, நம்மாட்டுக் குறையாத அன்பு கொண்டவர் அல்லர். அவர் செய்த குறிப்புக்களும் பொய் ஆகிவிட்டன. பெரியோருடைய தொடர்பும் மயக்கமாய் அமையும் போலும்!]
தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்:
பொய்யா தவர்தம் குறிபிழை யார்அவர் பூண்டஅன்பு
மெய்யாதல் தேறி அழுங்கல்மின் னேபுய வெற்புஇரண்டான்
மைஆழி வையம் நிலையிட்ட வாணன்தென் மாறைவெற்பின்
உய்யானம் மென்கழு நீர்நறு மாலை உடைத்துஅல்லவே.
[மின்னே! பொய்த்தல் அறியாத தலைவன் தான் குறித்த இடத்து வருதலைத்தவிரான். அவன் கொண்ட அன்பு மெய்யானது என்பதைத் தெளிந்து கவலை தீர்வாயாக. தன் புயங்களால் உலகத்தைத் தாங்கிப் பாதுகாக்கும் வாணனுடைய தென்மாறை மலையிலே உய்யானவனம் மென்கழுநீர் மாலையைத் தானே புனைந்து அணியும் ஆற்றலுடைத்து அன்றே! சோலையில் தலைவன் செங்கழுநீர் மாலையைத் தான் வந்து மீண்டமைக்கு அடையாளமாகவே சார்த்திச் சென்றுள்ளான்] 58
|
|
|
|