"அற்றது பற்று எனின் உற்றது வீடு" என்று வீடுபேறு எய்துதற்கு உரிய வழி
வகுத்துக் கூறப்பட்டுள்ளதே அன்றி, வீட்டுலகத்தின் பரப்பு இயற்கை
அமைப்பு மாந்தர்நிலை விலங்குநிலை முதலிய முதல்கரு உரிப்
பொருள்களைக் கூறுதல் நம்மனோர் அறிவிற்கு எட்டாது என்பதாம்.
பொருளாவது அகப்பொருள் புறப்பொருள் என்ற இரண்டனையும்
அணிவகைகளோடு செய்யுளில் அமைத்துக் கூறுவதாகலின்,
பொருளதிகாரத்தில் அகத்திணையியல்- புறத்திணையியல்- அணியியல்-
செய்யுளியல்- எஞ்சியவற்றைக் கூறும் பாட்டியல்-என்ற ஐந்து இயல்கள்
அமைந்துள்ளன.
அறம்பொருள் இன்பம் என்பனவற்றின் விளக்கங்கள் பரிமேலழகர்
திருக்குறளுக்கு வரைந்த உரைப்பாயிரத்தை ஒட்டி வரையப்பட்டுள்ளன.
ஒழுக்கமாவது - இன்னவை செய்யப்படல்வேண்டும் என்று
வரையறுக்கப்பட்டவற்றைச் செய்து, இன்னவை தவிர்க்கப்படல் வேண்டும்
என்று வரையறுக்கப்பட்டவற்றை நீக்குதலாம்.
வழக்காவது - ஒரே பொருளிடத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்
உரிமைபாராட்டி அதனை அவரவர் தாமே உடைமையாக்கும் செயலில்
ஈடுபடுதல்.
13