[ஒன்றனை ஒரு காரணத்தான் மட்டுமன்றிப் பிறிது ஒரு காரணத்தானும் உவமையாக்குவது சமுச்சய உவமையாம். சமுச்சயம் - எச்ச உம்மை. இது உம்மை உவமை எனவும் பெயர் பெறும். (வீர. 157)
போரில் அவுணர் வீரத்தை அழிக்கும் சிங்கத்தை இவர்ந்து செல்பவளும் திருத்துழாய்மாலையை அணிந்திருப்பவளுமாகிய கொற்றவையின் தோள்களை இளைய வேய்கள் அளவானும் வடிவானும் ஒத்தலேயன்றி நிறத்தானும் ஒக்கும் - என்ற இப்பாடலில், பசிய மூங்கில்கள் தோளுக்கு உவமையாதற்கு உரிய பொதுத்தன்மைக்கண் அளவு வடிவோடு நிறமும் என்ற உம்மையடுத்த சொல்லைப் புணர்த்தமை சமுச்சயமாக அமைந்திருத்தல் காண்க.
"இக்குறி அதனா லன்றிஇத னாலும்
ஒக்கும்என்று இசைப்பது உம்மை உவமை"
- வீர. 157 உரை]
உண்மையுவமை
மேதகு உவமையை விலக்கி அப்பொருளையே ஓதி முடிக்கும் உண்மை உவமை வருமாறு :
"தாமரை அன்று; முகமேஈது; ஈங்குஇவையும்,
காமரு வண்டுஅல்ல, கருநெடுங்கண்; - தேமருவு
வல்லியெனின் அல்லள், இவள்,என் மனம்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள்"
என வரும்.
[உபமானத்தை உபமேயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அஃது ஒப்புமையாகாமையான் அதனை விடுத்து உபமேயத்தையே குறிப்பிடுவது உண்மை உவமையாம். உவமையை நீக்கும்முன் அதனை ஒப்பிடுதல் நிகழ்ந்தமையின், இதுவும் உவமை வகையுள் ஒன்றாகும். இதனைத் தொல்காப்பியனார்,
|
|
|