அணியியல் - உவமையணி்

113 

நியமவுவமை

     அறிவுறின் அதனுக்கு இதுவே ஒப்புஎன நெறியுறப் புணர்க்கும் நியம
 உவமை வருமாறு :

     "தாதுஒன்று தாமரையே நின்முகம் ஒப்பது; மற்று
     யாதுஒன்றும் ஒவ்வாது; இளங்கொடியே! - மீதுஉயர்த்த
     சேலே பணியப் புலிஉயர்த்த செம்பியர்கோன்
     வேலே விழிக்கு நிகர்"

 என வரும்.

     [ஒரு பொருளுக்கு மற்று ஒரே பொருளே உவமையாதற்கு ஏற்புடையது என்று
 வரையறுத்துக் கூறுவது நியமஉவமை. மகரந்தம் பொருந்திய தாமரையேயன்றி, மற்று
 எதுவும் நின் முகத்துக்கு ஒப்பாகாது. பாண்டியனைப் பணிவித்துப் புலிக் கொடியை
 உயர்த்திய சோழனுடைய வேலே நின் விழிகளுக்கு நிகர்-என்ற இப்பாடலில்,
 முகத்திற்குத் தாமரையும், விழிகளுக்கு வேலுமே உவமையாகத் தக்கன என்று
 வரையறை செய்துள்ளமை காண்க.

    "வேறுஉரைப் பதுபிழை உவமை இதுவெனத்
     தேறிய பொதுவுடைத் திறத்தது நியமம்."                 - வீர.உரை. 156 

    "நியமமாம் பிரிநிலை ஏகாரம் வந்தே
     இயல்நிகர் ஒன்றுரைத்து ஏனைய நீக்கலே".              - தொ. வி. 334 

    "இதற்குஇஃதே உவமம் என்பது நியமம்"                - மு. வீ. பொ. 11] 

 

அநியமவுவமை

     இதுவே அன்றி இதனுக்கு இது போன்று அதுவும் ஆம்எனும் அநியம உவமை
 வருமாறு :

    "கவ்வை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு,
     மௌவல் கமழும் குழல்மடவாய்! - செவ்வி
     மதுவார் கவிரேநின் வாய்போல்வது; அன்றி,
     அதுபோல்வது உண்டேனும் ஆம்"

 என வரும்.

    15-16