128

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "இப்படி என்பது இயம்பியது உடைமையின்
     அப்பொரு வாம்எனும் அற்புத உவமை                - வீர. உரை. 156] 

 சிலேடை உவமை இரண்டனுள் செம்மொழிச்சிலேடை உவமை வருமாறு:

    "செந்திருவும் திங்களும் பூவும் தலைசிறப்பச்
     சந்தத் தொடையோடு அணிதழுவி, - செந்தமிழ்நூல்
     கற்றார் புனையும் கவிபோல் மனம்கவரும்
     முற்றா முலையாள் முகம்"

 என வரும்.

     [சொற்களைப் பிரிக்காமல் சிலேடைப் பொருள் கொண்டு உவமை செய்வது
 செம்மொழிச் சிலேடை உவமை. செந்தமிழ் நூல் கற்றார் புனையும் கவிகள்,
 தொடக்கத்தில் மங்கல மொழிகளாகத் திரு - திங்கள் - பூ முதலிய சொற்கள்
 அமையப் பெற, நல்ல ஓசைநயம் சான்ற எதுகை மோனை முதலிய தொடைகளோடு,
 பொருளணி சொல்லணிகள் அமையப்பெற்றுக் கற்றார் மனத்தைக் கவரும்;
 முற்றாமுலையாள  முகம், திரு - திங்கள் - என்ற தலையணிகளும் பூவும் தலையில்
 சிறக்க, நறுமண முடைய மாலைகளோடு பல அணிகளையும் அணிந்து மனம் கவரும் -
 என இப்பாடல் சிலேடை உவமையாயினவாறு காண்க. கற்றார் புனையும் கவி முற்றா
 முலையாள் முகத்திற்குச் சிலேடை உவமையாகும்.]

 பிரிமொழிச் சிலேடை உவமை வருமாறு :

     "நளிதடத்த வல்லியின் கண்நெகிழ ஞாலத்து
     அளவில் நிறைகடாம் சிந்திக் - களிறுஇகலும்
     கந்த மலையா நிலவும், கவடசைய
     வந்த மலையா நிலம்"

 என வரும். யானைமேல் செல்லுங்கால் நனி - செறிவு; தடம் - பெருமை; வல்லி -
 விலங்கு; கண் - மூட்டுவாய்;