பொதுவாக அமையுமாறு தொடுத்தல், கூறும் பொருள் கருது பொருள் இரண்டற்கும்
தனித்தனி பொருந்துமாறு அடைகளைக் கலந்து அமைத்தல், அடை மாறுபடுவதால்
கருதும் பொருள் புலனாகுமாறு அமைத்தல் என்று அது நான்கு வகைப்படும். மனத்தில் தோன்றும் பொருள் ஒன்றனை உலக நடையினை அடியோடு கடவாது
சான்றோர் வியப்புடன் ஏற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடுவது அதிசய அணியாம். அது
பொருள் குணம் தொழில் ஐயம் துணிவு திரிபு என்ற ஆறனை நிலைக்களமாகக்
கொண்டு தோன்றும்.
இயங்கியல்பொருள் நிலையியல்பொருள் என்ற இருவகைப் பொருள்களிடத்தும்
இயல்பாக விளையும் தன்மையை விடுத்துக் கவி தான் பிறிதுஒன்றனைக் கருதி
அவற்றின்கண் ஏற்றிக் குறிப்பிடும் அணி தற்குறிப்பேற்ற அணியாம். அவ்வணியில்
அன்ன, போல் முதலிய உவமையுருபுகள் இடையே பொருந்தி வருவதும் உண்டு.
ஒரு பொருளிடத்து இன்ன காரணத்தான் இன்ன நிகழ்ச்சி ஏற்பட்டது என்று
காரணத்தை விளக்கிக் கூறுவது ஏது அணியாம். அது செயலைக் காரணமாகக்
கொள்ளும் காரக ஏது, அறிவைக் காரணமாகக் கொள்ளும் ஞாபக ஏது என இரு
திறத்தது ; காரக ஏது - கருத்தா, செயப்படுபொருள், கருமம், கருவி, ஏற்பது, நீக்கம்
என்ற ஆறனையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும். அவ்வாறும் அல்லாத பிற
காரணங்களால் உய்த்து உணரத் தோன்றும் ஏது ஞாபக ஏதுவாம்.
ஒன்றினது இன்மையைக் கூறுவதும் அவ்வேது அணியின் பாற்படும்.
அவ்வின்மையாகிய அபாவமானது - என்றும் இல்லாமை, இல்லாமையது இல்லாமை,
ஒன்றினது இன்மையும் அதன் கண் அஃது இன்மையும், ஓரிடத்தும் ஒரு காலத்தும்
உள்ள பொருள் பிறிதோரிடத்தும் பிறிதொரு காலத்தும் இல்லாமை, முன் உள்ளது
அழிவுபட்டு இல்லாமை என்று ஐவகைத்து. தூரகாரிய ஏது, காரண காரியங்கள்
ஒருங்கு நிகழும் ஏது, காரணத்தின் முன் காரியம் நிகழும் ஏது, காரணத்திற்கு ஏற்ற
காரியமே நிகழும் ஏது, காரணத்திற்கு ஏலாக் காரியம் நிகழும் ஏது என்ற ஐவகை
ஏதுக்களும் முற் கூறப்பட்டனவற்றோடு