இப்பாடலில், மதியம் தேய்தல் இயற்கையாகவும், கவி அத்தேய்தலுக்கு ஒரு கற்பனை செய்து காரணம் காட்டுதற்கண் தற்குறிப்பேற்ற அணி இயங்குதிணையிடத்தே வந்தவாறு.]
நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம் வருமாறு :
"வேனில் வெயிற்குஉலந்த மெய்வறுமை கணடுஇரங்கி,
வானின் வளம்சுரந்த வண்புயற்கு, -- தான்உடைய
தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்
போதும் மீதுஏந்தும் பொழில்"
என வரும். பிறவும் அன்ன.
[முதுவேனிற் காலத்தில் கதிரவன் வெப்பம் தாளாமல் உலர்ந்த தன் மேனி வாட்டத்தை அறிந்து அதனைப் போக்குதற்கு மழை பொழிந்த கார்மேகத்திற்குக் கைம்மாறாகச் சோலைவானளாவிய தன் பெரிய கிளைகளாகிய கைகளால்மகரந்தத்தையும், தேனையும், பூக்களையும், ஏந்தி நிற்கிறது - என்ற இப்பாடலில்,
வானளாவிய மரங்களில் பூக்களும் தேனும் மகரந்தமும் இயற்கையாகக் காணப்பட அதற்குக் கவி ஒரு கற்பனை செய்து உரைத்த நிலைத்திணைத் தற்குறிப்பேற்ற அணியைக் காண்க.]
"சான்றோர் வருந்திய வருத்தமும் நமது
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி"
என - அன்ன என்பதூஉம்,
"காமருதேர் வெய்யவன் எங்கும் கரம்பரப்பித்
தேமருவு சோலை மலர்திறக்கும், -- தாமரையின்
தொக்க இதழ்விரித்துப் பார்க்கும், தொலைந்துஇருள்போய்ப்
புக்க புரைகிளைப்பான் போல்"
எனப் போல் என்பதூஉம் வந்தன. ஏனையவும் வந்துழிக் காண்க. (37) |
|
|