சாதிக்குறை விசேடம் வருமாறு :
"மேய நிரைபுரந்து, வெண்ணெய் தொடுவுண்ட
மாயனார் மாறுஏற்று அமர்புரிந்தார்; - தூய
பெருந்திருவும் பின்னும் கொடுத்துடைந்தார், விண்மேல்
புரந்தானும் வானோரும் போல்"
என வரும். தொடுவுண்டல் - தோண்டி எடுத்தல்; போல் - ஒப்பில்போலி.
[பசுக்களை மேய்த்து வெண்ணெயைத் தோண்டித் தின்ற கண்ணன் இடைக் குலத்தவனாயினும், போரிடத்தொடங்கிய அளவில் இந்திரனும், அவன் பக்கல் பொருத தேவரும் புறமுதுகு காட்டிக் கண்ணன் வேட்டவாறு பாரிசாத மரத்தைக் கொடுத்துத் தோற்று ஓடினார்கள் - என்ற இப்பாடலில்,
போர்த்திறம் அறியாத ஆயர்குலத்தைச் சேர்ந்த கண்ணன் தேவர்களையே வென்றான் என்ற செய்தி சாதிக்குறை விசேட மாதல் காண்க. ஒப்பில்போலி - உரையரைசச் சொல்]
பொருட்குறை விசேடம் வருமாறு :
"தொல்லை மறைதேர் துணைவன்பால், யாண்டுவரை,
எல்லை இருநாழி நெற்கொண்டு, ஓர் - மெல்லியலாள்,
ஓங்குஉலகில் வாழும் உயிர்அனைத்தும் ஊட்டுமால்,
ஏங்குஒலிநீர்க் காஞ்சி யிடை"
என வரும்.
[வேதங்களால் ஆராயப்படும் சிவபெருமானிடத்தில் ஓராண்டளவும் இருநாழி நெல்லைப்பெற்று, அந்நெல்லினைக் கொண்டே, பார்வதியாகிய பெண் நீர்வளம் நிரம்பிய காஞ்சிமா நகரில் முப்பத்திரண்டு அறங்கள் செய்து உலகிலுள்ள உயிர்களை யெல்லாம் உணவூட்டிக் காத்தாள் - என்ற இப்பாடலில்,
மிகக் குறைந்த அளவிற்றாய இருநாழி நெல்லால் உலகு முழுதும் இறைவி பாதுகாத்ததாகிய செயல் பொருட்குறை விசேடமாதல் காண்க.] |
|
|