அணியியல் - குணவணி

61 

     இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :

    "இடர்த்திறத் தைத்துற; பொற்றொடி! நீ, இடித்துத் தடித்துச்
     சுடர்க்கொடி திக்கனைத் திற்றடு மாற, துளிக்குமைக்கார்;
     மடக்குயிற் கொத்தொளிக்க, களிக்கப்புக்க தோகை, வெற்றிக்
     கடற்படைக் கொற்றவன் பொற்கொடித் தேரினிக் கண்ணுற்றதே"

 என வரும்.

     [பொற்றொடி! கார் கால வரவின்கண் இடி இடிக்கவும், மின்னல் மின்னவும்,
 மேகம் மழை தூவவும், குயில் வருந்தவும், மயில் மகிழவும், கடல் போன்ற படையுடன்
 சென்று வென்று மீளும் தலைவனுடைய அழகிய கொடி கட்டப்பட்ட தேர்
 இப்பொழுது வந்துவிட்டது; ஆதலின் வருந்துலை நீக்கு - என்று தலைவனுடைய
 பகைவயின் பிரிவின்கண் கார்கால வரவில் ஆற்றாளாய வல்லெழுத்துக்களே
 மிக்குவரத் தொடுத்துள்ளமை கௌட நெறியார் மரபு
 பற்றியதாகும்.]

     சொல்லினும் பொருளினும் சுவைபடு நெறியான் நல்லன தொடுக்கும்
 இன்பங்களுள் சீர் இடையிட்ட வழிமோனை முதலியன வரச் சொல்லினால்
 தொடுக்கும் இன்பம் வருமாறு :

    "முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடல்ஓதம் மூழ்கிப்போக
     அன்னைக்கு உரைப்பன் அறிவாய் கடலேஎன்று அலறிப்பேரும்
     தன்மை மடவார் தளர்ந்துஉகுத்த வெண்முத்தம் தகைசூழ் கானல்
     புன்னை அருப்பு ஏய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்ஊர்"

 என வரும்.

     [சிறுமியர் தாம் கட்டிய மணல் வீட்டினைக் கடல் வெள்ளம் அழித்ததாக,
 அதனால் வருந்தித் தம் தாயரிடம் நிகழ்ச்சியைக்