294

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது அகவல் வண்ணம்; நீரொழுக்கும்
காற்றொழுக்கும் போல வருவது ஒழுகல் வண்ணம்; தோற்கயிறும் இரும்பும் திரித்தாற்
போலவும், கல்மேல் கல்லுருட்டினாற் போலவும் வருவது வல்லிசை வண்ணம்; அன்ன
நடையும் தண்ணம் பறையும் போலவும் மண்மேல் நடந்தாற் போலவும் வருவது
மெல்லிசை வண்ணம்; இவை தொழில்வகையால் ஒருபுடை ஒப்புமையுடையன.

     இவை நூறு வண்ணமும் தம்முள் மயங்கி வரினும் மிக்கதனால் பெயர் கொடுத்து
வழங்கப்படும். இவ்வண்ணங்களுள் பெரும்பாலானவற்றிற்கு யாப்பருங்கல விருத்தியில்
95-ஆம் நூற்பா உரையில் எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றுள்ளன.

ஒத்த நூற்பாக்கள்

  `மெல்லிசை ஏந்தல் ஒழுகுருட் டெண்ணொரு வேமுடுகு
வல்லியல் பாவகப் பாட்டு நலிவகைப் போடியைபு
சொல்லிய சித்திரம் தாவு புறப்பாட் டளபெடையும்
வல்லிசை தூங்கல் நெடுஞ்சீர் குறுஞ்சீர் எனஇவையே.'
 
 

- வீ. சோ. 142

 
  `வண்ணம் என்ப வலிமெலி இடைஒழுகு
எண்உருட்டு எனமுடுகு ஏந்தல் தூங்கல்
அகைப்புப் புறப்பாட்டு அகப்பாட்டு அளபு
பாவு நலிவு தாவு ஒரூஉ
குறில்நெடில் சித்திரம் கூறுபாடு இருபதே.,'
 
 

 - தொ. வி. 250

 
  `எதுகை முதலடி எல்லாம் வல்லினம்
மிகுவன வல்லிசை யாம்; விளம் பிடினே.'
 
 

- மு. வீ. யா. ஒ. 22

 
  `மெல்லினம் மிகுவன மெல்லிசை ஆகும்.'  
 

 - 23

 
  `இடையினம் மிகுவன இடையிசை எனலே.'  
 

- 24

 
  `விரவி மூவினமும் மிகுவன ஒழுகிசை.'  
 

- 25