சுவாமிநாதம்4 நூல் வழி

விளக்கம் : நூலின் வகையும், அவற்றின் விளக்கமும் நன்னூல்
5 முதல் 8 வரையுள்ள சூத்திரங்களின் தொகுப்பு உரையாகும். நூலின்
தன்மைகள் நன்னூல் 4 ஐ ஒட்டியன.

4. பொதுக்குருக், கொள்வோன், கொடுத்தல், கோடல் என நான்காம்;
பூமியெனப் பொறை, முயற்சி, யளவு பயன், வன்மை
நதிக்குளிர்ச்சி தூய்து ஒழுக்கந் தெளி வூற்று நிறை போல்
நடுவையந் தீர்த்தன்மலை போல்தோற்ற நிலைமை
மதிப்பரிய பொருள்மாறா வளங்கடல் போல்நிறைவும்
மழையுண்டும் வற்றாமை விரிவாழ மலர் போல்
இதக்கடிமங் கலமலர்ச்சி யின்றியமை யாமை
யிரணியம்போற் குலம்பிறவும் உள்ளவன்மெய்க் குருவே.
 

(3)

 

பொதுப்பாயிரமும் நல்ல ஆசிரியனது இலக்கணமும் கூறுகின்றது
இப்பாடல்.

உரை : நூலாசிரியனது வரலாறும் மாணாக்கனது வரலாறும் ஆசிரியர்
மாணாக்கனுக்குச் சொல்லுதலின் வரலாறும் மாணாக்கர் கேட்டலின் வரலாறும்
என நான்கும் பொதுப்பாயிரமாகும்.

பூமியைப்போலப் பொறையும், முயற்சி செய்கிற அளவுக்குப்
பயன் தருதலும், வலிமையும் ஆறுபோன்ற குளிர்ந்த கருணையும், தூய
ஒழுக்கமும், தெளிந்த அறிவும், துலாக்கோல் போல உண்மை பெற இரண்டு
தட்டுகளுக்கும் நடுவே நிற்றலும், ஐயத்தைத் தீர்த்தலும், மலைபோல்
தோற்றமும், மதிப்பிடுதற்கரிய பொருளும், குறைவே இல்லாத வளமும்,
கடல்போல் நிறைவும், மேகம் போல உண்டும் வற்றாத தன்மையும், மலர்
போல மென்மையும், மங்கலத் தன்மையும், முகமலர்ச்சியும், இன்றியமையாத்
தன்மையும், பொன் போன்ற குலமேன்மையும் இன்ன பிறவும் உடையவனே
மெய்க்குரு ஆவான்.