வடிவம் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய ஆராய்ச்சி தமிழ் இலக்கணங்களில் காணப்படவில்லை. பொது வடிவத்திலிருந்து வரும் பிற வடிவங்கள் மாற்று வடிவங்கள் அதாவது மாற்றுருபு (Allomorph) எனப்படும். எல்லா மாற்று வடிவங்களையும் புணர்ச்சி விதி மூலம் விளக்குவர். எனவே புணர்ச்சி இலக்கணத்திற்கு முன்னால் பகுபத ஆராய்ச்சி அல்லது சொல்லியல் ஆராய்ச்சி மேலே சொன்ன முறையில் செய்யப்பட வேண்டும். ஆகவே பகுபத ஆராய்ச்சியைச் சற்று விரிவாக நன்னூலார் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார். ‘முன்மூன்று இவைக்காம் ஏனைசிலபுலுமே’ என்பது விளங்கவில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்ற முன்னால் சொன்ன மூன்றும் ஏனையவற்றில் (சந்தி, சாரியை, விகாரம்) சிலவற்றோடு பொருந்தும் என்று உரை கொள்ளலாமா என்பது ஆராயத்தக்கது. பகுபதம் பற்றிய இவர் விளக்கம் சற்றுப் புதுமையானது. நன்னூலார் பொருள், இடம் முதலிய ஆறு அடிப்படையில் வரும் பெயர்களும் காலத்தைக் குறிப்பாகவும் தெரிநிலையாகவும் காட்டும் வினைகளும் பகுபதம் என்று கூறியிருக்க இவர் பெயர்ச்சொல், வினைமுற்று, எச்சம் (பெயரெச்சம், வினையெச்சம்) போன்ற பிறவும் என விதந்து ஓதியுள்ளார். அவ்வாறே பகுதி, விகுதி, இடைநிலை போன்றவை எல்லாப் பதத்தோடும் வரும் என்பது போல ‘முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்’ (133) என்று நன்னூலார் பொதுவாகக் கூறியிருக்க ‘பகுதி விகுதி.......... ஏற்பன கொண்டு முடியும் பகுபதம்’ என்று இங்கு விதந்து ஓதியது இலக்கணத்தில் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. நன்னூல் 128, 131, 133 ஆகிய மூன்று சூத்திரங்களை அடியொற்றியது இச்சூத்திரம். |