பாலும் ஏற்று வரும். ஆனால் பெயர்ச் சொல் ஏதாவது ஒரு திணை பால் வேறுபாட்டிற்கு மட்டுமே உரியதாக வரும். எனவே தான் பெயர்ச்சொல்லை அம்முறையில் பகுக்க வேண்டும். இடப் பாகுபாடு மூவிடப்பெயர்க்கு (Pronouns) மட்டுமே பொருந்தும், எல்லாப் பெயர்களும் படர்க்கை இடத்தனவாகக் கொள்ளலாம். தா, கொடு போன்ற மிகச்சில வினைகளையே மூவிடப் பாகுபாட்டில் அடக்கமுடியும். பெரும்பான்மையான ஏனைய வினைகளை அவ்வாறு அடக்க முடியாது; மேலும் வினைச்சொற்கள், பால்காட்டும் ஈற்றில் மூவிடப்பெயரின் விகுதியை ஏற்று வரும் தன்மையன. எனவே மூவிடமாகப் பகுப்பது பொதுவாக எல்லாச் சொல்லுக்கும் பொருந்தக் கூடியது அன்று. பேச்சு மொழியின் இலக்கணமும் எழுத்து மொழியின் இலக்கணமும் எப்பொழுதும் வேறுபடக் கூடியன. எழுத்து மொழியிலும் உரை நடைக்கும் செய்யுளுக்கும் இலக்கணம் வேறுபடுதலும் இயல்பே. ஒலிநிலையில் வேறுபடாவிட்டாலும் புணர்ச்சி, சொல், தொடர்நிலை ஆகியவற்றில் வேறுபடுவதைத் தொல்காப்பியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார். சுட்டுச்சொல் நீண்டு வருதல் செய்யுளில் உரித்து என்பதை ‘நீடவருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல் எழுத்து 208) என்றும் பல சில என்பன பலாஅம் சிலாஅம் என்று வருவதைச் ‘செய்யுள் கண்ணிய தொடர் மொழியான’ (213) என்றும் கூறும் இவை போன்றவை புணர்ச்சியில் செய்யுளுக்கும் வழக்குக்குமுள்ள வேறுபாட்டைக் காட்டும். ஆக்கக்கிளவி முதலில் வருதல் (தொல். சொல். 22), சுட்டுச் சொல்லை முன்னர் சொல்லுதல் (தொல். சொல். 39), திணை விராய் எண்ணப்பட்ட பெயர் அஃறிணை முடிவு பெறுதல் (51) போன்ற தொடரியல் செய்திகள் செய்யுளுக்கே உரியனவாகக் குறிப்பிடுவதும் செய்யுளின் இலக்கணமும் |