சுவாமிநாதம்165பொருளதிகாரம்
 
நிலம் என்பது வரையும் (மலை) வரை சார்ந்த இடமும், சுரமும் சுரம் சார்ந்த
இடமும், காடும் காடு சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும்,
கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகப் பத்தாம். பொழுது என்பது பெரும்
பொழுது சிறு பொழுது என இருவகைப்படும். கார், கூதிர், முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில் எனப்பெரும் பொழுது அறு வகைப்படும். மாலை,
யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு எனச் சிறுபொழுதும்
அறுவகைப்படும்.

     விளக்கம் : இது நம்பியகப்பொருள் 6 முதல் 12 வரையுள்ள
சூத்திரங்களை அடியொற்றியது. ஆயினும் நம்பியகப்பொருள் சிறுபொழுது
ஐந்து என்று கூற இந்நூல் ஆறு என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. ஐந்து
வகைச் சிறுபொழுதை ‘காலையும் பகலுங் கையறுமாலையும் ஊர்துஞ்சி
யாமமும் விடியலும்’ என்று குறுந்தொகையில் (32. 1, 2) அள்ளூர்
நன்முல்லையார் விளக்குகின்றார்.

     பாட வி. ‘நன்பகல்’ (4-வது வரி) என்பது மூலபாடம்.

73. வகைக்கூதிர் முன்பனியா மமுங்குறிஞ்சிக்கு ஆகு(ம்);
     மகிழ்வேனில் பின்பனிநண் பகல்பாலைக் காகும்
முகப்புருகார் மாலைமுல்லைக்கு உரித்தாம்;வை கறையேஉரித்து
     மருதத்தி னுக்கா(ம்);நெய் தலுக்குஎற் பாடாந்
தொகுத்தபெரும் பொழுதாறு(ம்) மருதநெய்தற் காகும்;
     சொற்றதெய்வம், உயர்ந்தோர்,அல் லோர்விலங் கூர்நீர்புட்,
பகுத்தமரம், பூ,உணவு பறை,யாழ்பண் தொழிலாம்
     பதினான்கும் பிறவுமேகருப் பொருளாக் குகவே.    [3]

இது பொழுதும் கருப்பொருளும் விளக்குகின்றது.

     உரை: கூதிர், முன்பனி என்ற இரு பெரும்பொழுதும் யாமம்
என்ற சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்கு உரியன. கார்காலம் என்ற
பெரும்பொழுதும் மாலை என்ற சிறு பொழுதும் முல்லைத் திணைக்கு
உரியன. வைகறை என்ற