சுவாமிநாதம்208பொருளதிகாரம்
 
116. மீண்டும்போக்கு உணர்த்தல்அலர் உணர்த்தல்நீங் கிருக்கல்
     மீட்சியென, நால்வகைத்தாய்; நீங்குஇறைவி தம்போக்
காண்டபாங்கி யர்க்குஉணர்த்தி விடுத்தல்ஈன் றாட்கும்
     அவையுணர்த்தி விடுத்தல்நற் றாய்க்குஅந்தணர் வந்து
                                        உணர்த்தல்
ஈண்டுதமர்க்கு அனையுணர்த்தல், தமர்சேறல், அதுகண்டு
     இறைவிஇறைக்கு உணர்த்தல்அவன் விடுத்துஅகறல்
                                         செல்வாள்
தாண்டிறையின் பார்த்தழுங்கல், மணம்கண்டோர்மகிழ்தல்,
     சாற்றும்ஒன்பான் போக்குஇடையீடு உற்றுவரைந் திடலே.
                                              [32]

போக்கு இடையீடு உற்று வரைதலை விளக்குகின்றது.

     உரை: 1. மீண்டும் தலைவனும் தலைவியும் சென்றதைக் கூறுதல், 2.
ஊரார் தூற்றுதலைக் கூறுதல், 3. நீங்கியிருத்தல், 4. மீண்டமை என நான்கு
வகைப்படும் போக்கு இடையீடு உற்று வரைதல். 1. உடன் போக்குக்கு
நீங்குகிற தலைவி தன்போக்கைத் தோழியர்க்கு உணர்த்துதல், 2. தன்னுடைய
தாய்க்கும் உணர்த்துதல், 3. தாய்க்கு அந்தணரும் வந்து கூறுதல், 4.
உறவினருக்கு அன்னை கூறுதல், 5. உறவினரும் சேர்ந்து கொள்ளுதல், 6.
இதைப் பார்த்துத் தலைவி தலைமகனுக்குக் கூறுதல், 7. தலைவன் தலைவியை
விடுத்து நீங்குதல். 8. தலைவி (உறவினருடன்) செல்லுதலைத் தலைவன்
பார்த்துக் கொண்டிருந்து பின்னர் வருந்துதல், 9. திருமணத்தைக் கண்டோர்
மகிழ்தல் ஆகிய ஒன்பதும் போக்கு இடையீடு உற்றுவரைதல் (தலைவன்
தலைவியுடன் உடன் போக்குச் செல்லும்போது பிரிந்துசென்று பின்னர்த்
திருமணம் செய்து கொள்ளுதல்) என்பதன் கிளவிகளாகும்.

     விளக்கம் : இது அகப்பொருள் 197, 198 ஆகிய இரண்டையும்
தழுவியது. அகப்பொருளில் உடன்போக்கு இடையீடு என்ற தலைப்பில்
ஆறு கிளவிகள் மட்டுமே அதன் விரியாகச் சொல்லப்பட்டுள்ளன.