சுவாமிநாதம்216பொருளதிகாரம்
 

     விளக்கம் : இது அகப்பொருள் 209ஆம் சூத்திரத்தைத் தழுவியது.

124. எண்ணும்திணை கைகோள்கூற் றொடுகேட்போர் காலம்
     இட(ம்)மெய்ப்பாடு எச்ச(ம்)முன்னம் பயன்பொருளே
                                       துறையாய்
நண்ணிரண்டாறு அகத்துறுப்பாம் இவற்றின்விரிவு ஒழிபா
     நவின்றனமுன் றிணைகைகோள் இரண்டாகுந் தலைவி
அண்ணல்பார்ப் பான்பாங்கன் சகிசெவிலி கூற்றாம்
     ஆறும்அறை கூற்றாகும் அக்கூற்றோடு அறிவோர்
பண்விறலி தாய்கண்டோர் பரத்தையரே கூத்தர்
     பாணர் ஏழுக் கூற்றமேகற் பினிற்கூற் றுரித்தே.    [40]

அகப்பாட்டு உறுப்புகளும் கூற்றும் உணர்த்துகின்றது.

     உரை: 1. திணை, 2. கைகோள், 3. கூற்று, 4. கேட்போர், 5. காலம்,
6. இடம், 7. மெய்ப்பாடு, 8. எச்சம், 9. முன்னம், 10. பயன், 11. பொருள்,
12. துறை எனப்பன்னிரண்டும், அகப்பாட்டு உறுப்புக்களாகும். இவற்றுள்
திணை, கைகோள் ஆகிய இரண்டும் மேலே விளக்கப்பட்டன. 1. தலைவி, 2.
தலைவன், 3. பார்ப்பான், 4. பாங்கன், 5. தோழி, 6. செவிலி ஆகிய ஆறு
பேரும் களவுக்காலத்துக் கூற்றிற்கு உரியவராவர். இவர்களோடு 1. அறிவோர்
(முக்கோல் பகவர் போன்றவர்) 2. விறலி, 3. தாய், 4. கண்டோர், 5.
பரத்தையர், 6. கூத்தர், 7. பாணர் ஆகிய ஏழு பேரும் கற்புக் காலத்துக்
கூற்றிற்கு உரியவர் ஆவர்.

     விளக்கம் : இது நம்பியகப் பொருள் 211, 212, 213, 214 ஆகிய
சூத்திரங்களைத் தழுவியது.

     பாட விளக்கம் : எழக்கூற்றுமே (கடைசி வரி) என்பது மூலபாடம்.
ஏழுக்கூற்றுமே என்று திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது.