எழுத்ததிகாரம்101முத்துவீரியம்

9. ழகர ஈறு

சிறப்பு ழகரம்

368. சிறப்பு ழகரமெய் யிருவழி யினுமிகும்.

(இ-ள்) சிறப்பாகிய ழகரவொற்று அல்வழிவேற்றுமை யினுமிகும்.

(வ-று) கீழ்ச்சாதி, பூழ்க்கால் எனவரும். (209)

கீழ்

369. டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

(இ-ள்.) வேற்றுமைக்கண் டகரமெய்யாகத் திரியுமென்க.

(வ-று.) கீழ் + திசை = கீட்டிசை எனவரும். (210)

திகழ், சோழ என்பன

370. தநவரின் டணவா மென்மனார் புலவர்.

(இ-ள்.) தகரம்வரின் டகரமாகவும், நகரம்வரின் ணகரமாகவுந் திரியும்.

(வ-று.) திகழ் + தசக்கரம் = திகடசக்கரம்: சோழ + நாடு = சோணாடு.

(வி-ரை.) திகழ் + தசக்கரம் = திகட சக்கரம், பத்துத் திருக்கரங்கள் என்பது பொருள்.
இவ்விதி தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு நூல்களிலும் இல்லை எனினும்
கந்தபுராணத்தில் இதற்கேற்ற எடுத்துக்காட்டு உளது. அது வருமாறு:

‘‘திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்’’ (கந்தபு - விநாயகர் காப்பு) (211)

தாழும் கோலும்

371. தாழ்முன் கோல்வரி னக்கொடு சிவணும்.

(இ-ள்.) தாழென்னுஞ் சொற்குமுன், கோலென்னுஞ் சொல்வரின் அக்குச் சாரியை
பெறும்.