எழுத்ததிகாரம்106முத்துவீரியம்

(வ-று.) பார்க்கு.

(வி-ரை.) இத்தொல்காப்பிய நூற்பாவிற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்
வெவ்வேறாக உரைகாண்பர். அது வருமாறு:

தொடர் மொழிக் குற்றுகரங்களுள் ஈரொற்றுக்கள் இடையே தொடர்ந்து வருங்கால்,
அவற்றுள் முன்னையது இடையெழுத்தாக இருப்பின் அதுகொண்டே இடைத்தொடர்க்
குற்றுகரம் என்றல் கூடாது; அதன்பின் வரும் வல்லெழுத்துக்களையோ அன்றி
மெல்லெழுத்துக்களையோ கொண்டுதான் வன்றொடர்க் குற்றுகரம் என்றும், மென்றொடர்க்
குற்றுகரம் என்றும் பெயர் பெறும் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.

தொடர்மொழிக் குற்றுகரங்களுள் ஈரொற்றுக்கள் இடையே தொடர்ந்துவரின் அவற்றுள்
முதலொற்று இடையின ஒற்றாக இருப்பின், அதற்குப் பின்வரும் ஒற்று இடையினமாக இராது;
வல்லினமாகவோ அல்லது மெல்லினமாகவோ தான் இருக்கும் என்பர் நச்சினார்க்கினியர்.

ஆர்க்கு, ஈர்க்கு என்பனவற்றில், இடையில் வந்த ஈரொற்றுக்களில் முன்னையன
இடையினமாக இருக்கப் பின்னையன வல்லினமாதலையும், நொய்ம்பு, மொய்ம்பு
என்பனவற்றில், இடையில் வந்த ஈரொற்றுக்களில் முன்னையன இடையினமாக இருக்கப்
பின்னையன மெல்லினமாதலையும் காண்க.

ஆயினும் இக்கருத்து ‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக் க ச த ப ங ஞ ந ம
ஈரொற் றாகும்’ என்னும் நூற்பாவிலேயே பெறப்படுதலின் இது பொருந்தாது ஆதலின்
இளம்பூரணர் கருத்தே இந் நூற்பாவிற்குப் பொருத்தம் உடைத்தாகும். (தொல் - எழுத்து -
இளம் - 408 விளக்கவுரை) (229)

குற்றியலுகரம் தன்மாத்திரையிற் குறுகாமை

389. இருவழி மருங்கினுங் குற்றிய லுகரம்
     எல்லாங் குறுகா தென்மனார் புலவர்.

(இ-ள்.) அல்வழி வேற்றுமையினும் அறுவகைக் குற்றியலுகரமும் தன்மாத்திரையிற்
குறுகாவாம்.

(வி-ரை.)

‘அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகரம் நிறையும்’ (குற்றிய - 3)

என்ற தொல்காப்பியத்தைத் தழுவியது இந்நூற்பாவாகும். இதற்கு இளம்பூரணரும்
நச்சினார்க்கினியரும் வெவ்வேறாக உரைகாண்பர். அது வருமாறு:

அறுவகைக் குற்றுகரங்களும், தனிமொழிக்கண் வருங்கால் குறுகி அரைமாத்திரையும்,
அவை புணர்மொழிக்கண் வருங்கால் குறுகாது