சொல்லதிகாரம்132முத்துவீரியம்

(வ-று.) சோழியர், சேரலர், அவையத்தார், வருவார், வெற்பர், திணிதோளர், கரியர்,
இருவர், அவர், இவர், உவர், எவர், யாவர், கொண்மார். (24)

அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள்

482. துவ்விறு சுட்டொடு சுட்டணை யாய்தமும்
     யாது மொன்று மஃறிணை யொன்றன்
     பாற்படர்க் கைப்பெய ரென்மனார் புலவர்.

(இ-ள்.) துவ்விகுதிச் சுட்டுப்பெயரும், சுட்டணை யாய்தப் பெயரும், யாதென்னும்
வினாப்பெயரும், ஒன்றென்னு மெண்ணுப் பெயரும், அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைப்
பெயராமென்க.

(வ-று.) அது, இது, உது, அஃது, இஃது, உஃது, ஒன்று, யாது எனவரும்.

(வி-ரை.)

‘வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம்
ஒன்றனெண் ணின்னன வொன்றன் பெயரே’’ (பெயரி - 22)

என்பது நன்னூல். (25)

அஃறிணைப் பலவின்பாற் பெயர்கள்

483. வகார விறுதியும் வையிறு மொழியுங்
     கள்ளெ னிறுதியுங் கணக்கும் பிறவும்
     அத்திணைப் பலவின் படர்க்கைப் பெயரே.

(இ-ள்.) வகரவொற் றிறுதியாகிய பெயரும், வைவிகுதிப் பெயரும், கள்ளிறுதிப்
பெயரும், எண்ணுப் பெயரும், இவை போல்வன வாகிய பிறபெயரும் அஃறிணைப்
பலவின்பாற் படர்க்கைப் பெயராம்.

(வ-று.) அவ் - இவ் - உவ், அவை - இவை - உவை, நரிகள் - புலிகள், இரண்டு -
மூன்று - நான்கு - ஐந்து -ஆறு - ஏழு. (26)

இதுவுமது

484. பல்ல பலசில வென்னும் பெயரும்
     உள்ள வில்ல வுளவில வென்னும்
     பெயரு மத்திணைப் பலவின் மேன.