சொல்லதிகாரம்135முத்துவீரியம்

(வ-று.) தந்தை - ஆண்மை முறைப்பெயர், தாய் - பெண்மை முறைப்பெயர். (33)

அவை இருதிணையிலும் தத்தம் பால் ஏற்றல்

491. ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும்.

(இ-ள்.) முதற்பெயர் முதலாகக் கூறப்படு மிருபத்தாறும் பிறவுமாகிய
பொதுப்பெயர்களுள் ஒவ்வொன்றே இருதிணையிலுந் தன்றன்பாலை யேற்றுவரும்.

(வ-று.) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது, தாயிவள், தாயிப்பசு, பிறவுமன்ன.

(வி-ரை.) நன்னூலில் அவற்றுள் என்ற தனிச்சொல்லுடன் இந்நூற்பா காணப்படும். (34)

பெண்மைப் பெயர்

492. மகடூஉக் குறித்த வெல்லாப் பெயரும்
     ஒன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே.

(இ-ள்.) பெண்மையைப்பற்றி வருகிற நான்கு பெயரும், அஃறிணை யொன்றற்கும்,
உயர்திணை யொருத்திக்கு முரியவாம்.

(வ-று.) சாத்தி வந்தது - சாத்தி வந்தாள், முடத்தி வந்தது - முடத்தி வந்தாள்
பிறவுமன்ன. (35)

ஆண்மைப் பெயர்

493. ஆடூஉக் குறித்த வெல்லாப் பெயரும்
     ஒன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே.

(இ-ள்.) ஆண்மையைப்பற்றி வருகிற நான்கு பெயரும் அஃறிணை யொன்றற்கும்,
உயர்திணை யொருவனுக்கு முரியவாம்.

(வ-று.) சாத்தன்வந்தது-சாத்தன்வந்தான், முடவன் வந்தது - முடவன் வந்தான். (36)

பன்மைப் பெயர்

494. பன்மையைக் குறித்த பெயரெல் லாமும்
     ஒன்று பலவொரு மைக்கு முரிய.

(இ-ள்.) பன்மையைப்பற்றி வருகிற மூன்று பெயரும், அஃறிணை யொருமைக்கும்
அத்திணைப் பன்மைக்கும் உயர்திணை