சொல்லதிகாரம்154முத்துவீரியம்

ஒரு உருபு பிற வுருபோடும் வரும்

555. மற்றைய வுருபும் அவற்றோ ரற்றே.

(இ-ள்.) நான்கனுருபல்லாத பிறவுருபுகளுந் தொகையல்லாத தொடர்மொழிக்கண்
ஒன்றன் பொருள் சிதையாமல் ஒன்று மயங்குதற்கட் குற்றமிலவாமென்க.

(வ-று.) நூலதுகுற்றங் கூறினானென்னுந் தொடர்மொழிக்கண் நூலைக்
குற்றங்கூறினானெனவும், அவட்குக் குற்றேவல் செய்யுமென்னுந் தொடர்மொழிக்கண் அவளது
குற்றேவல் செய்யுமெனவும் வரும்.

(வி-ரை.)

‘ஏனை யுருபும் அன்ன மரபின
மான மிலவே சொன்முறை யான’ (வேற்றுமை மயங் - 28)

என்னும் தொல்காப்பியக் கருத்தைத் தழுவியதாகும். (98)

விளியுருபு

556. விளியெனப் படுப ஏற்கும் பெயரொடு
     விளங்கத் தோன்று மியற்கைய வென்ப.

(இ-ள்.) விளியென்று கூறப்படுவன தம்மை யேற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும்
இயல்புடையனவா மென்க. (99)

விளிகொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும்

557. அதுவே,
     விளிகொளும் பெயரும் விளிகொளாப் பெயரும்
     எனவிரு திறத்தவா மென்மனார் புலவர்.

(இ-ள்.) அதுவே விளிகொளும் பெயரும், விளிகொளாப் பெயருமென விரண்டு
திறத்தனவாம். (100)

உயர்திணைக்கண் விளியேற்கும் உயிர் ஈறுகள்

558. அவைதாம்,
     இ, உ, ஐ, ஓ விறுதிக் கிளவி
     உயர்திணை மருங்கின் விளியேற் கும்மே.