2முத்துவீரியம்

பொதுப்பாயிரம்

அப்பாயிரம் பொதுப்பாயிரமெனவும் சிறப்புப்பாயிரமெனவும் இருவகைப்படும்.
அவற்றுள், பொதுப்பாயிரம், எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படும்; அது நான்கு
வகைப்படும்.

என்னை,

‘‘ஈவோன் றன்மை யீத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
ஈரிரண் டாகும் பொதுவின் றொகையே’’

என்றாராகலின்.

ஈவோர், கற்பித்தற் குரியரும் கற்பித்தற் குரியரல்லரும் என இருவகையர். அவற்றுள்,
கற்பித்தற் குரியர் நான்குதிறத்தரும், கற்பித்தற் குரியரல்லர் நான்குதிறத்தருமாம்,

என்னை,

“மலைநிலம் பூவே துலாக்கோ லென்றின்னர்
உலைவி லுணர்வுடை யோரா குவரே
கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகை பருத்தியோ டிவையென மொழிப’’

என்றாராகலின்,

ஈதலியற்கை, பொழிப்பு முதலிய வுரைகளிற் பயின்று தெளிந்த அறிவினனாய்க்
கற்பிக்கப் புகுங்கால் தன்றெய்வம் வாழ்த்தி மாணாக்கன் உளங்கொள்ளுமாறு
அறிவுறுத்தலாம்.

என்னை,

“ஈத லியல்பே யியல்புறக் கிளப்பிற்
பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையில்
திகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்
கொடுப்ப தியல்பெனக் கூறினர் புலவர்’’

என்றாராகலின்,

கொள்வோர், கற்பிக்கப்படுவோரும், கற்பிக்கப்படாதோரும் என இருவகையர்;
அவருள், கற்பிக்கப்படுவோர் அறுவகையர், கற்பிக்கப்படாதோர் எண்வகையர்.