| பொருளதிகாரம் | 215 | முத்துவீரியம் |  
  
3. பொருளதிகாரம் 
அகவொழுக்கவியல் 
தற்சிறப்புப்பாயிரம் 
769. மெய்ப்பொருள்
பகாப்பொருள் வேத முதற்பொருள் 
     அப்பொரு ளகத்தணிந்
தறைகுவன் பொருளே. 
என்பது, மெய்யாகிய
பொருளும் பகுக்கப்படாத பொருளும் வேதமுதற்
பொருளுமான 
அப்பொருளை இதயக்கண் ணிருத்திப்
பொருளிலக்கணத்தை யானியம்புவன. (1) 
எழுதிணை 
770. அகப்பொருள்
கைக்கிளை யைந்திணை பெருந்திணை 
     எனவெழு வகைப்படு
மென்மனார் புலவர். 
என்பது, அகப்பொருள் -
கைக்கிளையும், குறிஞ்சி - முல்லை - பாலை - மருதம் - 
நெய்தலாகிய ஐந்திணையும், பெருந்திணையும் என
ஏழுவகைப்படும். 
என்னை? 
கைக்கிளை முதலாப்
பெருந்திணை யிறுவா 
முற்படக் கிளந்த
வெழுதிணை யென்ப. (தொல் - அகத் - 1) 
என்றாராகலின். (2) 
கைக்கிளை 
771. அவற்றுள் கைக்கிளை
யொருதலைக் காமம். 
என்பது, முற்கூறியவற்றுள்
கைக்கிளையென்பது - தலைவன், தலைவி இருவருள் 
ஒருதலை நிகழும் காமம். 
(வி-ரை.) ‘கைக்கிளை
என்ற பொருண்மை யாகோ எனின், கை என்பது
சிறுமைபற்றி 
வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள்
செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; 
பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு;
கைக்குடை, கையேடு, கைவாள், 
கைஒலியல்,
கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை
வழங்குப வாதலின்’ என்பர் 
இளம்பூரணர். (3) 
			
				
				 |