பொருளதிகாரம்226முத்துவீரியம்

உரிப்பொருள்

808. 1 புணர்தலும் பிரிதலு மிருத்தலு மிரங்கலும்
     ஊடலு மிவற்றி னிமித்தமு மென்றவை
     தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.

என்பது, புணர்தல் புணர்தனிமித்தம்; பிரிதல் பிரிதனிமித்தம்; இருத்தல்
இருத்தனிமித்தம்; இரங்கல் இரங்கனிமித்தம்; ஊடல் ஊடனிமித்தம் இவை திணைக்குரிய
பொருள். (40)

களவிற்குரிய திணைகள்

809. குடவரைக் குறிஞ்சியுங் குணகட னெய்தலுங்
     கடவ தாகுங் களவினீர் மைக்கே.

என்பது, மேலைமலைக் குறிஞ்சித்திணையும் கீழைக்கடல் நெய்தற் றிணையுங்
களவிற்புணர்ச்சிக்குரியன. (41)

கற்பிற்குரிய திணைகள்

810. நன்னில மருதமுந் தென்னில முல்லையுந்
     துன்னிரு கற்பொடு தோன்று மென்ப.

என்பது, நல்ல நிலமாகிய மருதத்திணையும் அழகிய நிலமாகிய முல்லைத்திணையும்
கற்பிற்புணர்ச்சிக்குரியன. (42)

வேதம் ஓதுதற்குரியோர்

811. மறையோர் மன்னர் வணிகர் வேளாளருள்
    ஓதற் றொழிலுரித் துயர்ந்தோர் மேன.

என்பது, அந்தணர் அரசர் வைசியர் வேளாளர் நான்கு வருணத்தாருள்
வேதமோதுந்தொழில் பின்னவரொழிய முன் னுயர்ந்தோராகிய மறையோர் மன்னர் வணிகர்
இம்மூவருக்கும் உரியன. (43)

வேதம் அல்லாத பிற கல்வி ஓதுதற்குரியோர்

812. எல்லார்க்கு முரியன விவையல பிறவே.

1. தொல் - அகத் - 16.