பொருளதிகாரம்245முத்துவீரியம்

கவன்றுரைத்தல்

என்பது, மறுத்துரைத்து வருந்தாநிற்பக் கண்ட பாங்கன், ஒருகாலத்துங் கலங்காத
உள்ளமிவ்வாறு கலங்குதற்குக் காரணமென்னோவெனத் தலைவனொடு கூறல்.

(வ-று.)

விலங்கலைக் கால்விண்டு மேன்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றவன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே. (திருக்.24)

(கு-ரை.) விலங்கல் - மலை. கால்விண்டு - காற்றுப்பிரிந்து.

வலியழிவுரைத்தல்

என்பது, பாங்கன் கவன்றுரையாநிற்ப, முன்பு இத்தன்மையே னாகிய யானின்றொரு
சிறுமான்விழிக்கு இவ்வாறாயினேனெனத், தலைமகன்றன் வலியழிந்தமை கூறிவருந்தல்.

(வ-று.)

தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே. (திருக். 25)

(கு-ரை.) சித்தம் பித்தன் என்று மலைத்தறிவாரில்லை - பிறழவுணர்ந்தாய் என்று
மாறுபட்டு என்னைக் குறைகூறற்கும் இல்லை.

விதியொடுவெறுத்தல்

என்பது, வலியழிந்தமை கூறிவருந்திய தலைமகன், பாங்கனொடு புலந்துவெள்கி,
யான்செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லையென விதியொடு வெறுத்துக் கூறல்.

(வ-று.)

நல்வினை யுந்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர் துப்புறவே. (திருக். 26)