சொல்லதிகாரம்129முத்துவீரியம்

(வ-று.) பொன் - பறி, ஆடை - காரை = குழூஉக்குறி; ஓலை - திருமுகம் -
மங்கலம்; ஈகாரபகரம், ஆமுன்பகரவீ = இடக்கரடக்கல்.

(வி-ரை.) இடக்கர் தோன்றாது அதனை மறைத்ததை இடக்கரடக்கல் என்றும்,
இடக்கர்போற் கூறத்தகாததன்றேனும் மங்கலமில்லதை யொழித்து மங்கலமாகக் கூறுவதை
மங்கலமென்றும், ஒவ்வொரு குழுவினுள்ளோர் யாதானும் ஒரு காரணத்தான் ஒரு
பொருளினது சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியாற் கூறுவதைக் குழூஉக்
குறியென்றும் கூறுவர். (நன் - 267 - சங்கரநமச்சிவாயர் உரை) (17)

செய்யுள் இன்னதென்பது

475. கற்றுணர் வல்லோர் கற்பித் துரைப்பது
     செய்யு ளென்மனார் தெளிந்திசி னோரே.

(இ-ள்.) பலநூல்களையும் ஓதி அவற்றின் பொருள் நன்குணர்ந்த பெரியோர்
கற்பித்துப் பாடுவது செய்யுளாம்.

(வ-று.) ‘இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து’’ (திருக்குறள்-காமம்) (18)

குறிப்பிற் றருமொழிகள்

476. தொகையொன் றொழிபொதுச் சொல்லே முதனிலை
     தகுதி வினைக்குறிப் பன்மொழி யாகு
     பெயரே குறிப்புரை யல்லன வெளிப்படை.

(இ-ள்.) தொகைக் குறிப்புச்சொல்லும், இருதிணை ஆண் பெணு ளொன்றனை
யொழிக்கும் பொதுச்சொல்லும், முதற்குறிப்புச் சொல்லும், மூவகைத்தகுதி
வழக்குச்சொற்களும், வினைக்குறிப்புச் சொல்லும், அன்மொழித் தொகைச்சொல்லும்,
ஆகுபெயரும், குறிப்பினாலிருதிணை யைம்பாற் பொருள்களையும் தருகிற சொற்களாம்.
இவையல்லன வெல்லாம் வெளிப்படையாக அப்பொருளைத் தருகிற சொற்களாம்.

(வ-று.) அலங்குளைப்புரவி யைவரொடு சினைஇ(புறம்-2) தொகைக் குறிப்பு;
ஆயிரமக்கள் பொருதார் - ஒன்றொழி பொதுச்சொல்; அறத்தாறிதுவென (திருக்குறள்
- அறம் - 37) முதற்குறிப்பு; ஈகார பகரம் - தகுதி; பொன்னன் - வினைக்குறிப்பு;
பொற்றொடி - அன்மொழித்தொகை; உலகு-ஆகுபெயர். (19)