எழுத்ததிகாரம்27முத்துவீரியம்

ஆதலின் இந் நூற்பாவிற்கு ‘உகரம் நகரத்தோடும், ஊகாரம் வகரத்தோடும் வாராது’
என நிரனிறையாகப் பொருள் உரைப்பின் ஒருவாறு பொருந்துவதாகும்.

அரசன் சண்முகனார் தாம் எழுதிய பாயிர விருத்தியில் இக்கருத்தே வலியுடையது
எனக் கூறல் காண்க. எனினும் ‘பொருநுக் கடிது’ என உகரம் நகரத்தோடும் வருதலின்
இதுவும் ஆராயத் தக்கதேயாம். (87)

எல்லா மெய்யெழுத்துக்களோடும் கூடி ஈறாகும் உயிர்கள்

88. எஞ்சிய வெல்லா மிறுதி யாகும்.

(இ-ள்.) இவை யொழிந்த வுயிர்கள் எல்லா மெய்களோடும் ஈறாகும். (88)

மொழிக்கு ஈறாகும் எழுத்துக்கள்

89. அந்தமாம்
    ஞ, ண, ந, ம, ன - ய, ர, ல, வ, ழ, ள, வே.

(இ-ள்.) ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள இப்பதினொரு மெய்யுமீறாகும்.

(வ-று.) உரிஞ், மண், வெரிந், நிலம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ் வாள்.
(89)

ஒரு மொழிக்குரிய எழுத்துக்கள்

90. அவற்றுள்,
    ஞ, ந வொரு மொழிக்குரித் தாமென மொழிப.

(இ-ள்.) முற்கூறியவற்றுள் ஞ, ந க்களொரு சொற்குரியவாம்.

(வ-று.) உரிஞ், பொருந்.

(வி-ரை.) நகரம் இருமொழிக்கு ஈறாகும் எனக் கூறிப் பொருந், வெரிந் என்பனவற்றை
எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர். (மொழி மரபு - 46) (90)

நான்கு மொழிக்குரிய எழுத்து

91. வகர நான்மொழிக் குரியன வாகும்.

(இ-ள்.) வகரமெய் நான்குசொற் குரியவாம்.

(வ-று.) அவ், இவ், உவ், தெவ். (91)