எழுத்ததிகாரம்28முத்துவீரியம்

குற்றியலுகரமும் மொழிக்கு ஈறாகும்

92. எஞ்சிய வுகரமு மிறுதி யாகும்.

(இ-ள்.) குற்றியலுகரமு மீறாகும்.

(வ-று.) நாகு. (92)

உயிர்மெய் நிற்கும் முறை

93. ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே.

(இ-ள்.) உயிர்மெய், ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாக வரும்.

(வி-ரை.)

‘‘மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே’’ (நூன் - 98)

எனத் தொல்காப்பியரும்,

‘‘ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய்’’ (எழுத் - 34)

என நன்னூலாரும் கூறுதல் காண்க. (93)

உயிர், மெய்யோடியையினும் தந்நிலை திரியாது

94. மெய்யொடு மேவினும் வேறு படாவுயிர்

(இ-ள்.) உயிர் மெய்களோடு கூடினும் வேறுபடாவாம்.

(வ-று.) கோ, பூ, தீ, பா, கௌ.

(வி-ரை.) மெய்யெழுத்துக்கள் தாம் கூடிய உயிரின் மாத்திரையே தமக்குரிய
மாத்திரையாகக் கொள்ளும் என்பது இதன் கருத்தாகும்.

‘‘மெய்யோ டியையினும் உயிரியல் திரியா’’ (நூன் - 10)

என்பது தொல்காப்பியம். (94)

மெய்கள் அகரத்தோடு கூடிவரும்

95. மெய்யி னியக்க மகரமொடு சிவணும்

(இ-ள்.) மெய் பதினெட்டும் அகரவுயிரோடியலும்.

(வ-று.) க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன. (95)