பொருளதிகாரம்312முத்துவீரியம்

22. ஒருவழித்தணத்தல்

என்பது, இவ்வாறிரவுக்குறி புணர்ந்து அலரெழுந்ததென்று விலக்கப்பட்ட பின்னர்த்
தெருண்டு வரைதலைத் தெளியானாயின், அவ்வலரடங்கச்,
சிலநாளொருவழித்தணந்துறைதல், உடன் கொண்டுபோதல், தோழியான் வரைவு
முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல் இம்மூன்றனு ளொன்று
முறைமையாம்.

அவற்றுள், ஒருவழித் தணத்தல் வருமாறு

அதன் வகை

849. அகன்றணைவு கூறலும் மாழியொடு கேட்டலும்
     ஆழியொடு புலத்தலும் மன்னமோ டாய்தலும்
     ஆழிக் குரைத்தலும் கூட லிழைத்தலும்
     சுடரொடு புலம்பலும் பொழுதுகண்டு மயங்கலும்
     பையு ளெய்தலும் பரிவற் றுரைத்தலும்
     அன்னமோ டழிதலும் வரவுணர்ந் துரைத்தலும்
     வருத்தங் கூறலும் வருபதின் மூன்றும்
     திருத்திய வொருவழித் திறனா கும்மே.

என்பது, அகன்றணைவு கூறல், கடலொடு வரவுகேட்டல், கடலொடு புலத்தல்,
அன்னமோடாய்தல், தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல், கூடலிழைத்தல், சுடரொடு
புலம்பல், பொழுது கண்டு மயங்கல், பறவையொடு வருந்தல், பங்கயத்தோடு
பரிவுற்றுரைத்தல், அன்னமோடழிதல், வரவுணர்ந்துரைத்தல், வருத்தமிகுதி கூறல் ஆகிய
பதின்மூன்றும் ஒருவழித் தணத்தலாம்.

அகன்றணைவு கூறல்

என்பது, அலரறி வுறுத்ததோழி, இத்தன்மையை நினைந்து நீ சிலநாள்
அகன்றணைவையாயின், அம்பலுமலரு மடங்கி, இப்பொழுதே யவளுக்குப் பழியில்லையா
மெனத், தலைமகனுக்கிசைய அகன்றணைவு கூறல்.

(வ-று.)

புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல் லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. (திருக். 181)