எழுத்ததிகாரம்34முத்துவீரியம்

(இ-ள்) அ, இ, உ, எ, ஒ ஆகிய குற்றுயிரைந்து மொழியாகாவாம்.

(வி-ரை.) மொழி கொளா என மாற்றுக. மொழியாகக் கொள்ளப்பட மாட்டா என்பது கருத்து.

‘‘குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே’’

என்பர் தொல்காப்பியர். (3)

ஓரெழுத்தொரு மொழியாகும் உயிர்மெய்கள்

118. உயிர்போற் க, ச, த, ந, ப, ம, வ வென்மொழி
    ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

(இ-ள்.) நெட்டுயிரோ ரெழுத்தொரு மொழியானது போலக் க, ச, த, ந, ப, ம, வ
வேழு மெய்களினெடிலு மோரெழுத் தொரு மொழியாகுமென்க.

(வ-று.) கா, கூ, கை, கோ-சீ, சே, சை, சோ-தா, தீ, தூ, தே, தை-நா, நீ, நை, நோ-பா,
பூ, பே, பை, போ-மா, மீ, மே, மை, மோ-வா, வீ, வை, வௌ.

(வி-ரை.) உயிர்மெய் நெட்டெழுத்துக்களில் மொழியாதற்குரிய எழுத்துக்களின் முதல்
எழுத்தை மட்டுமே ஆசிரியர் குறித்துள்ளார். எனினும் உரையாசிரியர் அவ்வவ்வின
எழுத்துக்களையும் குறித்துச் சென்றுள்ளார். ககர, சகர, நகர, வகர இனங்களில் நந்நான்கும்,
தகர, பகர, மகர இனங்களில் ஐயைந்தும் உரையில் குறிக்கப்பட்டுள்ளது. நன்னூலார் மகர
இனத்தில் ஆறும், நகர இனத்தில் ஐந்தும், யாவும், உயிர்மெய்க் குற்றெழுத்தில் நொ, துவும்
ஓரெழுத்தொரு மொழியாய் வரும் என்பர்.

‘‘உயிர்மவில் ஆறும் தபநவில் ஐந்தும்
கவசவில் நாலும் யவ்வில் ஒன்றும்
ஆகும் நெடில்நொது வாங்குறில் இரண்டோடு
ஓரெழுத் தியல்பதம் ஆறேழ் சிறப்பின’’

என்பது நன்னூல் (பதவி - 2.)

கா - சோலை, கூ - நிலம், சீ - நீக்கு, தூ - பற்றுக்கோடு, தே -தேன், நை - வருந்து,
நோ - துன்பம், பே - அச்சம், மீ, மே - மேல் மை - மேகம், வீ - மலர், வை - கூர்மை,
வௌ - வவ்வுதல், ஏனைய வெளிப்படை. (4)

மொழியின் வகை

119. மொழிபெயர் வினையென மொழியப் படுமே.