பொருளதிகாரம்398முத்துவீரியம்

இயற்பட மொழிதல்

என்பது, தலைமகனை இயற்பழித்தவர்க்கு, அன்று நம் பொருட்டாக,
நம்புனத்தின்கண்ணே மாந்தழை யேந்தி வந்தார் இன்றென் னெஞ்சத்தின் கண்ணார்,
அதுகிடக்க, மறந்து உறங்கினேனாயின், அமளியிடத்து வந்தென் பயோதரத்தைப்
பிரியாதார், இத்தன்மையாரை நீங்கள் கொடுமை கூறுகின்ற தென்னோ வெனத், தலைமகள்
அவனை இயற்பட மொழிதல்.

(வ-று.)

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவரந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவுமுண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே. (திருக். 378)

நினைந்து வியந்துரைத்தல்

என்பது, புனலாடப் பிரிந்து பரத்தையிடத் தொழுகாநின்ற தலைமகன், யான்
தன்னை நினையாது வேறொன்றன்மே லுள்ளத்தைச் செலுத்தும் வழியுந்தானென்னை
நினைந்து என்னுள்ளம் புகாநின்றாள், அவ்வாறன்றி யான் தன்னை நினையுந்தோறும்
பள்ளத்துப் புகும் புனல்போல நிறுத்த நில்லாதென் மனத்தாளாகா நின்றாள், ஆதலால்
பிரிந் தீண்டிருத்தல் மிகவும் அரிதெனத், தலைமகளை நினைந்து வியந்து கூறல்.

(வ-று.)

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே. (திருக். 379)

வாயில்பெறாது மகன்றிறநினைதல்

என்பது, பரத்தையிற் பிரிந்து நினைவோடு வந்த தலைமகன், வாயிற்கணின்று, 
இத் தன்மையானென்னை வந்தணைகின்றிலன், யானினி வண்டுறையுங் கொங்கையை
யெவ்வாறு நண்ணுவதென்று வாயில்பெறாது மகன்றிற நினையா நிற்றல்.