யாப்பதிகாரம்415முத்துவீரியம்

அகவற்குரிய அடிச்சிறுமை

882. அகவற் கொருமூன் றடிசிறு மையே.

என்பது, ஆரியப்பாவிற்கு மூன்றடி சிறுமையாகும்.

(வ-று.)

போது சாந்தம் பொற்ப வேந்தி
யாதி நாதர் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே. (21)

வஞ்சிப்பாவிற்குரிய அடிச்சிறுமை

883. வஞ்சிப் பாவு மவற்றோ ரற்றே.

என்பது, வஞ்சிப்பாவிற்கு மூன்றடி சிறுமையாகும்.

(வ-று.)

செங்கண்மேதி கரும்புழக்கி
யங்கணீலத் தலரருந்திப்
பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ், செழுநீர்,
நல்வயற் கழனியூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே. (22)

கலிப்பாவிற்குரிய அடிச்சிறுமை

884. கலிப்பா விற்கொரு நாலடி சிறுமை
     யாகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, கலிப்பாவிற்கு நான்கடி சிறுமையாகும்.

(வ-று.)

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாளி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போ
யெல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போன்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே. (23)

நால்வகைப் பாக்களுக்கும் உரிய அடிப்பெருமை

885. பெருமை யுரைப்போன் பெற்றித் தாகும்.

என்பது, நான்கு பாவிற்கும் பெருமை கவி கூறுவோனறி வினளவேயாம்.