யாப்பதிகாரம்479முத்துவீரியம்

உற்பவமாலை

1065. அரிபிறப் பீரைந் தனையுமா சிரிய
      விருத்தத்தால் விளம்புவ துற்பவ மாலை.

என்பது, திருமால் பிறப்புப் பத்தையும் ஆசிரிய விருத்தத்தால் கூறுவது உற்பவ
மாலையாகும். (104)

தானைமாலை

1066. அகவலோ சையிற்பிற ழாதகவ லின்முனர்
      எடுத்துச் செல்லுங் கொடிப்படை யியம்பல்
      தானைமா லைப்பெயர் தழுவுமா மெனலே.

என்பது, அகவலோசையிற் பிறழாது ஆசிரியப் பாவால் முன்னரெடுத்துச் செல்லும்
கொடிப்படையைக் கூறுவது தானை மாலையாகும். (105)

மும்மணிமாலை

1067. ஆதிப் பாக்கலித் துறையு மகவலும்
      அந்தா தித்தா றைந்தியம் புவது
      மும்மணி மாலையா மொழியுங் காலே.

என்பது, வெண்பாவும் கலித்துறையும் ஆசிரியப்பாவும் அந்தாதித்து முப்பது செய்யுட்
பாடுவது மும்மணி மாலையாகும். (106)

தண்டகமாலை

1068. வெண்பா வான்முந் நூறு விரிப்பது
      தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே.

என்பது, வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும். (107)

வெட்சிமாலை

1069. ஆனிரை கவர்ந்து வருபவன் வெற்றி
      விளம்புதல் வீர வெட்சி மாலை.

என்பது, சுத்த வீரன் பகைவரூரிற் சென்று பசுநிரை கவர்ந்து வருவதை மிகுத்துக்
கூறுவது வெட்சி மாலையாகும். (108)