யாப்பதிகாரம்487முத்துவீரியம்

பெயர் நேரிசை

1094. பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார
      நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
      எழுப தேனு மைம்ப தேனும்
      அறைவது பெயர்நே ரிசையா கும்மே.

என்பது, பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார, நேரிசை வெண்பாவால்,
தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது பெயர் நேரிசையாகும். (133)

ஊர் நேரிசை

1095. ஊரைச் சார வுரைப்பதூர் நேரிசை.

என்பது, பாட்டுடைத் தலைவனூரைச் சார, நேரிசை வெண்பாவால்,
தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது ஊர் நேரிசையாகும். (134)

ஊர் வெண்பா

1096. வெண்பா வாற்சிறப் பித்தூ ரொருபான்
      பாவிரித் துரைப்பதூர் வெண்பா வாகும்.

என்பது, வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச் செய்யுட் பாடுவது ஊர்
வெண்பாவாகும். (135)

விளக்குநிலை

1097. வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
      வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
      டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
      விளக்கு நிலையென விளம்பப் படுமே.

என்பது, வேலும் வேற்றலையும் விலங்கா தோங்கியவாறு போலக் கோலொடு
விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவதாகக் கூறுவது விளக்கு நிலையாகும். (136)