அணியதிகாரம்559முத்துவீரியம்

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

1286. யாப்பினுட் பற்பல வடிகளி னின்ற
      இருமொழி களைப்பொரு ளேற்கு மிடத்துக்
      கூறுவ கொண்டு கூட்டாகு மென்ப.

என்பது, செய்யுளடிகள் பலவினுநின்ற சொற்களைப் பொருள் ஏற்குமிடத்து
எடுத்துக்கூறல் கொண்டு கூட்டுப்பொருள் கோட்செய்யுள்.

(வ-று.)

ஆலின்மேற் பாயுங் குவளை குளத்தலரும்
வாலி னெடிய குரங்கு. (29)

பிரிபொருட் சொற்றொடர்

1287. ஒருபொருள் பயவா தொருவித் தோன்றல்
      பிரிபொருட் சொற்றொடர்ப் பெயரா கும்மே.

என்பது, ஒருபொருளைப் பயவாமல் நீங்கித்தோன்றல் பிரிபொருட்
சொற்றொடர்வழு.

(வ-று.)

கொண்டன் மிசைமுழங்கக் கோபம் பிறந்தனவால்
தெண்டிரைநீ ரெல்லாந் திருமுனியே-யுண்டுமிழ்ந்தான்
வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவளோர்
பஞ்சியார் செஞ்சீ றடி. (தண்டி-மேற்) (30)

அது வழுவமைதியாகும் இடம்

1288. பித்த மயக்கினும் பெருங்குடி வெறியினும்
      வழுவின் றென்மனார் மறையுணர்ந் தோரே.

என்பது, பித்தினான் மயங்கியவிடத்தும் கள்ளுண்டு களித்த விடத்தும் குற்றமன்று.

(வ-று.)

காம ருருவங் கலந்தேன்யான் காங்கேயன்
வீமனெதிர் நின்று விலக்குமோ-தாமரைமேன்
மால்பொழிய வந்தா ரருகர் மதுவுடனே
பால்பொழியு மிவ்வூர்ப் பனை. (தண்டி-மேற்) (31)

செய்யுளணி முற்றும்.

அணியிலக்கணம் முற்றும்.